இலங்கையில் நிலநடுக்கம் – மக்களிடம் தகவல்களை சேகரிக்க இன்று நடவடிக்கை!

நிலநடுக்கம் ஏற்பட்ட புத்தல மற்றும் வெல்லவாய பகுதிகளில் இன்று கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் பிற்பகல் புத்தள மற்றும் வெல்லவாய பகுதிகளுக்கு அருகில் ரிக்டர் அளவுகோலில் 3.5 மற்றும் 3 ஆகப் பதிவான இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்தன.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை வெள்ளவாய பிரதேசத்தில் 2.3 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்த நிலநடுக்கங்கள் தீவிரமானவை அல்ல என்று பணியகம் தெரிவித்திருந்தது.

இந்த நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, பணியகத்தின் இரண்டு ஆய்வுக்குழுக்கள் நேற்று அந்தப் பகுதிக்கு களப்பயணம் மேற்கொண்டதுடன், இன்றும் அதே நடவடிக்கைகளைத் தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிலநடுக்கம் தொடர்பான தகவல்கள் நேற்றைய தினம் அந்தப் பிரதேச மக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் மேலதிக தகவல்களை மக்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, இந்த விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், அது தொடர்பான அறிக்கை அடுத்த சில தினங்களில் வெளியிடப்படும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *