பொலிஸ் உத்தியோகத்தரும் மனைவியின் மைத்துனரால் கடத்தப்பட்டு தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தர் ஒருவர் கண்டல் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகஸ்தர் தனது மைத்துனரைக் கொண்டு பாதிக்கப்பட்ட நபரை கணேசபுரத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று,பின்னர் வாகனம் ஒன்றில் மாற்றி அழைத்து சென்று தாக்கியதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்தார்.
காணியை துப்பரவு செய்வதற்காக பிற்பகல் 3 மணியளவில் அழைத்து சென்ற நிலையில், வான் ஒன்றில் ஏற்றியுள்ளனர். பின்னர் குறித்த நபருக்கு மதுபானத்தை கட்டாயப்படுத்தி பருக்கியதாக அவர் தெரிவிக்கின்றார்.
தொடர்ந்து பரந்தன் பூநகரி வீதியை அண்மித்த இடத்தில் வைத்து சரமாரியாக தாக்கியதாகவும், சுயநினைவிழந்ததாகவும் பின்னர் வாய்க்கால் ஒன்றில் விழுந்து கிடந்ததாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
சம்பவத்தின் போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவியும் மற்றுமொரு நபரும் இருந்தாகவும் அவர் தெரிவிக்கின்றார். பொழுது சாய்ந்த நிலையில் தன்னை திருநகர் வீதியை அண்மித்த பகுதியில் தன்னை வானிலிருந்து தள்ளி விழுத்திவிட்டு சென்றதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இதன்போது, தன்னை தாக்க வேண்டாம் எனவும்,வீட்டில் கொண்டு சென்று விடுங்கள் என கதறிய போதும் அவர்கள் தாக்கி காயப்படுத்தியதாகவும் தெரிவிக்கிறார்.
தொடர்ந்து, இன்று காலை கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், கண்டல் காயங்கள், நோவுகளுடன் விறைப்பும் காணப்படுவதுடன், காதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் திருட்டு சம்பவம் இடம்பெற்றதாக தெரிவித்து, அதனை எங்கு வைத்திருப்பதாக விசாரித்தே தன்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, குறித்த பொலிஸ் உத்தியோகத்தரும் அவரது மைத்துனரும் கிளிநொச்சி குற்றத்தடுப்பு பொலிசாருடன் இணைந்து மற்றுமொரு வீட்டினையும், வர்த்தக நிலையத்தினையும் முறைப்பாடு எதுவுமின்றி வீட்டுரிமையாளர்கள் இல்லாத வேளை தேடுதல் மேற்கொண்டதுடன், அங்கு இருந்த சிறுவர்களையும் அச்சுறுத்தியிருந்தமை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் பொலிஸ் உயர்பீடங்களிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.