இலங்கை கடன் திருப்பி கொடுக்குதோ, இல்லையோ..! இதனை கட்டாயம் செய்ய வேண்டும் – வைரமுத்து டுவிட்

இந்தியா இலங்கைக்கு கொடுத்த கடன் திருப்பி கொடுக்குதோ, இல்லையோ தமிழக மீனவர்களின் படகுகள் திரும்ப வேண்டும் என பிரபல பாடலாசிரியர் வைரமுத்து கூறியுள்ளார்.

இந்திய எல்லைக்குள் அத்துமீறி இலங்கை கடற்படை நுழைந்து தமிழக மீனவர்கள் மீது தாக்குதவது, சுட்டுப் படுகொலை செய்வது, கைது செய்வது பல வருடங்களாக நீடித்து வருகிறது.

இது தொடர்பாக, கடந்த சில வருடங்களாக தமிழக மீனவர்களின் படகுகளையும், இலங்கை அரசு பறிமுதல் செய்து வருகிறது.

கடந்த 7 வருடங்களாக இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் பராமரிப்பின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

குறித்த படகுகளையாவது மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் தமிழக மீனவர்களின் 105 படகுகளை இலங்கை அரசு ஏலம் விடப் போவதாக அறிவித்திருக்கிறது. தமிழக மீனவர்களின் படகுகள் பிப்ரவரி 7-ஆம் திகதி முதல் ஏலத்துக்கு விடப்பட உள்ளன.

பிப்ரவரி 7-ஆம் திகதி யாழ்.காரைநகரில் 65 படகுகளும் பிப்ரவரி 8-ஆம் திகதி காங்கேசன்துறையில் 5 படகுகளும் பிப்ரவரி 9-ஆம் திகதி கிராஞ்சியில் 24 படகுகளும்,

பிப்ரவரி 10-ஆம் திகதி தலைமன்னாரில் 9 படகுகளும் பிப்ரவரி 11-ஆம் திகதி கற்பிட்டியில் 2 படகுகளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஏலம் விடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் இந்த அறிவிப்பு தமிழக மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கவிஞர் வைரமுத்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இலங்கை அரசின் பிடியிலிருக்கும் 105 மீனவப் படகுகளும் மீட்கப்பட வேண்டும் அலைவிரிக்கும் சமுத்திரத்தில் வலைவிரிக்கும் மீனவர்க்குப் படகுதான் கடல் கடவுள்.

அவை உரியவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் இலங்கைக்கு இந்தியா கொடுத்த கடன் திரும்புமோ இல்லையோ முதலில் படகுகள் திரும்ப வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *