
கொழும்பு, ஜனவரி 25: தெற்கு கடலில் 300 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இழுவைப் படகு ஒன்றை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக இலங்கை கடற்படை உயர் அதிகாரி கூறியது: தெற்கு கடலில் போதைப் பொருளுடன் இழுவைப் படகு ஒன்று வருவதாக போலீஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு (பி.என்.பி ) இரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, புலனாய்வுப் பிரிவினரும், இலங்கை கடற்படையும் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதன்போது, 300 கிலோகிராம் போதைப் பொருளுடன் வந்த இழுவைப் படகு பறிமுதல் செய்யப்பட்டது.
இழுவைப் படகில் இருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். முதல் கட்ட விசாரணையில், அவர்கள் ஆறு பேரும் இலங்கை குடிமக்கள் என்பது தெரிய வந்துள்ளது. இந்த போதைப் பொருள் கடத்தலின் பின்னணியில் சர்வதேச வலைப்பின்னல் உள்ளதா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.