
திருமலை, ஜனவரி 25: திருப்பதி திருமலையில் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி திருமலையில் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஏழுமலையானை தரிசனம் செய்ய திருமலைக்கு வரும் பக்தர்களில் பலர் கொரோனா இல்லை என்ற, நெகட்டிவ் சான்றிதழ், தடுப்பூசி அட்டை இல்லாமல் திருமலைக்கு வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களை, தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஊழியர்கள் திருப்பி அனுப்பி வருகிறார்கள். இதனால் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் செல்லும் நிலை உள்ளது.
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும். மேலும் 48 மணி நேரத்துக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்ததற்கான ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழையும் கொண்டுவர வேண்டும்.
அவ்வாறு வரும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுவார்கள். இல்லையேல், திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.