
வாஷிங்டன், ஜனவரி 25: பசுபிக் கடலில் அமெரிக்க போர் விமானம் விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
பசிபிக் கடல் பகுதியில் சீன ஆக்கிரமிப்பைத் தடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க கடற்படை ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தென் சீனக் கடல் பகுதியில் யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் என்ற விமானம் தாங்கி போர் கப்பல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இதன்போது, கப்பலின் மேல்தளத்தில் உள்ள ஓடுபாதையில் எஃப்-35 சி ரக போர் விமானம் ஒன்று தரையிறங்க முற்பட்டது. இதன்போது, விமானியின் கட்டுப்பாட்டை மீறிய அந்த விமானம் விபத்துக்குள்ளானது. அமெரிக்க மீட்பு படை ஹெலிகாப்டர் மூலம் விமானத்தில் இருந்த விமானி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் நலமாக உள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் போர்க் கப்பலில் இருந்த 7 மாலுமிகள் காயமடைந்தனர். வழக்கமான பயிற்சி நடவடிக்கையின்போது இந்த விபத்து நடந்துள்ளதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெறுவதாகவும் காயமடைந்த மாலுமிகளில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் அமெரிக்க கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.