போக்குவரத்துக்கு சிரமப்படும் மன்னார் மடுக்கரை மக்களின் அவல நிலை!SamugamMedia

மன்னார் நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மடுக்கரை முள்ளிமோட்டை கிராமத்தில் வசிக்கும் மக்களின் போக்குவரத்து தேவைகளுக்கு பாலம் அமைத்துக் கொடுக்கப்படாததால் பாரிய சிரமங்களை எதிர் கொண்டு வருவதாகவும்  வடக்கு மாகாண ஆளுநர்   தமது கிராமத்திற்கு நேரடியாக வருகை தந்து பார்வையிட்டு உள்ளக வீதி மற்றும் பாலம் போன்றவற்றை அமைத்துத் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மடுக்கரை முள்ளிமோட்டை கிராமத்து மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

மடுக்கரை முள்ளிமோட்டை கிராமத்தில்  2018ம் ஆண்டு குடியேற்றப்பட்ட  90 குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் 18 குடும்பங்கள் ஆற்றைக் கடந்து குடியேற்றப்பட்டுள்ளனர்.

வீடுகளுக்கு அருகாமையிலேயே அருவி ஆற்றின் கிளை   ஆறு ஓடிக் கொண்டிருப்பதால்  தற்காலிக பாலம் கூட அமைத்துக் கொடுக்கப் படாமல்  ஆற்றில் இறங்கியே ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். கோடை காலத்தில் ஓரளவு நீர் வற்றிக் காணப்பட்டாலும் மழை காலங்களில்  ஆற்றில் நீர் நிறைந்து ஓடுவதால் அன்றாட கடமைகளை செய்ய முடியாமல் அப்பகுதி மக்கள் திண்டாடி வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கடும் மழை காரணமாக போக்குவரத்து பிரச்சினையால்  அவர்களின் உறவினர்கள் வீடுகளில் வசித்து வருகிறார்கள்.

அப்பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டதில் இருந்து உள்ளக வீதிகள் ஒழுங்காக அமைத்துக் கொடுக்கப்படாமலும்  குறித்த ஆற்றினை கடந்து செல்வதற்கு பாலம் மமைத்துக் கொடுக்கப்படாததாலும்  அப்பகுதியில்  வசிக்கும் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என்று அனைவரும் அன்றாடப் போக்குவரத்திற்கும்  பாடசாலை செல்வதற்கும் அவசர மருத்துவ தேவைகளைப் பெறுவதற்கும் இயலாமல் தவித்து வருகிறார்கள்.

மடுக்கரை மற்றும் முள்ளிமோட்டை கிராமத்தில் உள்ளக வீதிகளை  சீரமைப்பது தொடர்பாக  உரிய அதிகாரிகள் இன்று வரை எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்கவில்லை  என்று பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்திய உள்ளார்கள்.

எனவே வடக்கு மாகாண ஆளுநர்   எமது கிராமத்து மக்கள் மீது அக்கறை கொண்டு  தற்காலிகமாக  பாலம் அமைத்துத் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மடுக்கரை முள்ளிமோட்டை கிராமத்து மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *