
தற்காலிகமாகவேனும் ஒரு தீர்வை எட்டவேண்டும் என்பதற்காக 13 ஆவது திருத்த சட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் என ஓரணியாக தமிழ் தேசிய கட்சிகள் கையெழுத்திட்டு இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பும் அதேவேளை அதனை குழப்புவதற்காக ஏதோவொரு திரைமறைவு அரசியல் நிகழ்சிக்கு பின்னால் நின்றுகொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் செயலாற்றுகின்றனர் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.
வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மண்டபத்தில் மறைந்த ஊடகவயிலாளர் சுகிர்தராஜனின் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்ட போது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
தமிழ் தேசியத்தின்பால் பற்றுறுதி கொண்டு பல ஊடகவியலாளர்கள் உழைத்துக்கொண்டிருந்தபோது அது அரசாங்கத்தின் அரசியல் செயற்பாட்டுக்கு சர்வதேச ரீதியில் குந்தகத்தினை ஏற்படுத்தும் என்பற்காக இவர்களை உயிரோடு விட்டுவைக்க கூடாது என்ற ஒரு நோக்கத்திற்காகவே பல ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக படுகொலை செய்யப்பட்ட வரலாற்றை நாம் கண்டுள்ளோம்.
அதன் ஒரு கட்டமாக விடுதலைப்புலிகளின் போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்திலே தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்ற ஒரு கூட்டு அணியை ஆயுதப்போராட்டத்திற்கு சமாந்திரமாக பக்கபலமாக அரசியல் ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியதன் அவசியத்தினை கருத்தில் கொண்டு ஊடகவியலாளர்களே கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் முதன்முதலாக ஈடுபட்டார்கள்.
சிவராம், நடேசன் இவர்களை போன்றவர்கள் தங்களது உயிர்த்தியாகம் செய்து இங்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வுக்காக அல்லது நிரந்தரமான தமிழர்களின் விடிவுக்காக பரந்துபட்ட ஒற்றுமை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்தவகையில் தமிழர்கள் ஓரணியில் திரழ்வதற்கு காரணம் இந்த ஊடகவியலாளர்கள் என்றால் அதற்கு மாற்று கருத்து கிடையாது.
தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள் பல்வேறு முரண்பாடுகள், பிரச்சினைகள் உட்கட்சி பிரச்சினைகள் இருந்தாலும் கூட தமிழ் தேசியக்கூட்டமைப்பு உயிரோடு இருக்கின்றது என்றால் தியாகம் மேற்கொண்ட ஊடகவியலாளர்களது அர்ப்பணிப்பு என்பதனை எவரும் மறந்துவிடக்கூடாது.
எனினும் ஊடகவியலாளர்களின் அர்ப்பணிப்பிலேதான் கூட்டமைப்புக்கான அத்திவாரம் இடப்பட்டது. ஊடகவியலாளர்களே அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைப்புலிகளுடன் பேசி இதனுடைய தேவையை அவர்களுக்க உணர்த்தி அவர்களும் பேசி இந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
எனினும் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் ஊடகவியலாளர்களுக்கும் சம்பந்தம் இல்லை. விடுதலைப்புலிகளுக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் சம்பந்தமில்லை என்கின்ற தோரணையில் எம்மில் சிலரால் பிரசாரமாக கொண்டு செல்லபபட்;டதனையும் நாம் பார்க்கின்றோம்.
இன்று ஊடகவியலாளர்கள் உண்மையை வெளிப்படுத்துவதற்கு பெரும் அச்சுறுத்தலாக பாதுகாப்பு தரப்பினர்களும் அவர்களோடு சேர்ந்தியங்கும் புலனாய்வாளர்களும் இருக்கின்றனர்.
ஊடகவியலாளர்களது அறிக்கைகள் அரசாங்கத்தினை ஆட்டம் காண செய்கின்ற வேளையில் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளும் கொலை மிரட்டல்களும் ஏற்படுத்தப்படுகின்றது.
இந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உருவாக்கத்தில் முக்கிய பங்கேற்ற தலைவர்களாக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ஈழமக்கள் பரட்சிகர விடுதலை முன்னணின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரே இந்த ஊடகவியலர்களுடன் நேருக்கமான உறவினை கொண்டிருந்து மிகப்பெரும் ஆலோசனை வழங்கி ஒற்றுமைப்பணி மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இன்று பாரத பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் உட்பட கடந்த காலத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கு எழுதிய கடிதம் உட்பட பலவற்றிற்கு தமிழ் தேசியக்கட்சிகளை ஒற்றுமைப்படுத்தி அதன் மூலம் இன்றும் அந்த ஐக்கியத்தினை மேற்கொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த முயற்சிகள் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.
கடந்த அரசாங்கம் போலவே இந்த அரசாங்கமும் மீண்டும் மீண்டும் தமிழ் தேசியக்கட்சிகளை ஏமாற்ற முயற்சிக்கின்ற வேளையில் நாம் சர்வதேசத்தின் ஆதரவை பெற்றால்தான் இந்த நீண்ட பிறையோடிப்போயிருக்கின்ற அரசியல் தீர்வாக இருந்தாலும் அல்லது இனப்பிரச்சினைக்கான நீடித்து நிலைக்க கூடிய தீர்வாக இருந்தாலும் அதற்கு சர்வதேசத்தின் தலையீடு இல்லாமல் மஹிந்த, கோட்டா கூட்டு குடும்ப அரசாங்கம் எந்த தீர்வையும் வழங்காது என்பது இப்போது எமக்கு தெரிந்த விடயமாகவே உள்ளது.
ஆகவே நாம் ஒற்றுமைப்பட வேண்டும். இல்லாவிட்டால் எமக்கான தீர்வு எட்டாக்கனியாவே இருக்கும்.
அவ்வாறு ஒற்றுமையாக செயற்பட்டால்தான் எமது மக்களுக்கான தீர்வை பெற சர்வதேசத்தின் ஆதரவுடன் பயணிக்க முடியும்.
இல்லாவிட்டால் தொடர்ந்தும் நாம் ஒவ்வொரு விடயத்திற்கும் போராட வேண்டிய நிலைதான் ஏற்படும்.
தமிழ் அரசியல் கட்சிகளுக்குள் ஒற்றுமையில்லாமல் தொடர்ந்தும் பிளவுபட்டுக் கொண்டிருப்பதானது எமது தமிழ் கட்சிகளுக்குள் காணப்படும் மிகப்பெரிய சாபக்கேடு.
தமிழ் தேசியப்பரப்பில் உள்ள தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக ஒற்றுமையாக சாத்தியமான ஜதார்த்தமான தற்போது தமிழ் மக்களுக்கு என்ன தேவையோ அதனை முன்னிறுத்தி தற்காலிகமாகவேனும் ஒரு தீர்வை எட்டவேண்டும் என்பதற்காக 13 ஆவது திருத்த சட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் என கோரியும் எமது அரசியல் தீர்வு சமஸ்டி முறையிலாக இருக்க வேண்டும்.
அதுவே எமது இலக்கு என்பதனை கூட்டிக்காட்டியும் அனைவரும் கையெழுத்திட்டு இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பும் அதேவேளை அதனை குழப்புவதற்காக ஏதோவொரு திரைமறைவு அரசியல் நிகழ்சிக்கு பின்னால் நின்றுகொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் செயலாற்றுகின்றனர்.
அதற்கு இந்த ஒற்றுமைப்பட்ட கட்சிகளுக்குள்ளும் ஒரு பிரிவினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி 30 ஆம் திகதி இந்த ஒற்றுமைக்கு எதிராக செய்யும் போராட்டத்திற்கு தமிழரசுக்கட்சிக்குள் ஒரு சிலரும் பிரசாரம் செய்கின்றனர்.
அவர்கள் அங்கு ஒரு முகத்தினையும் இங்கு ஒரு முகத்தினையும் காட்டி வருகின்றனர். இதுவே தமிழ் மக்களின் ஒரு சாபம்.
எமது தமிழ் தேசியக்கட்சிகளின் ஒற்றுமையை ஆரம்பத்திலேயே உடைத்து அழித்து விட வேண்டும் என்பதற்காக எமக்கள் இருக்கின்ற சிலரும் வெளியில் உள்ள சிலரும் கடும் முயற்சி எடுத்து வருகின்றனர்.
எனினும் நாம் அர்ப்பணிப்புடன் இதில் செயற்படுவதனால் அவர்களுடைய முயற்சிகளை உடைத்தெறிவோம்.
எமது மக்களின் விடுதலைக்காக நாம் ஒற்றுமைப்பட்டு செயற்படுவோம். அதற்கு ஊடகவியலாளர்களும் ஒத்துழைக்க வேண்டும்.
சிலரது அச்சுறுத்தலுக்கும் பயமுறுத்தலுக்கும் அஞ்சாது உண்மையை எழுதுபவர்களாக எமது மக்களுக்கு செய்திகளை வழங்குங்கள்.
இதுவே இந்த தியாகம் செய்த ஊடகவியலாளர்களுக்கான அஞ்சலியாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.