பிரபாகரன் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முஸ்லீம்களுக்கு எவ்வித விமோசனமும் இல்லை! – அப்துல் மஜீத் SamugamMedia

பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்றால் அவர் மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்பதில் எனக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை. பிரபாகரன் மட்டுமல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பினால் கூட முஸ்லீம்களுக்கு எவ்வித விமோசனமும் இல்லை என ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக இந்தியாவில் உள்ள தமிழக தலைவர்கள் சிலர் கூறுவது தொடர்பில் பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது,

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருப்பதாக இந்தியாவில் உள்ள தமிழக தலைவர்கள் சிலர் கூறுவதை மறுப்பதற்கில்லை. அவர் உயிருடன் இருந்தால் நல்லது தான்.அதாவது இதுவரை காலமும் நன்றாக அனுபவங்களை அனுபவித்திருப்பார்.

போராட்டம் என்பது தற்போது சாத்தியப்படாது என ஒழிந்து இருந்திருப்பார்.இப்படி ஒழிந்து தான் பிரபாகரன் வாழ்ந்திருந்தால் அவருக்கு தான் அவமானம். அவர் அவ்வாறு திரும்பி வந்தால் ஜனநாயகத்திற்கு வந்து தேர்தல் கேட்டு பாராளுமன்றத்திற்கு வாருங்கள் என கேட்பேன்.

அவ்வாறு பாராளுமன்றம் அவர் வருகின்ற சந்தரப்பத்தில் அநீதி இழைக்கப்பட்ட முஸ்லீம்களுக்கான நீதியை முஸ்லீம் கட்சிகள் உட்பட நானும் அவரிடம் கேட்பேன்.பிரபாகரனோ அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்போ முஸ்லீம்களுக்கு எந்தவொரு தீர்வினையும் இனியும் பெற்று தர மாட்டார்கள் என்பதும் எமக்கு தெரியும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட இதர கட்சிகள் கூட பாராளுமன்றத்தில் இருந்தும் கூட முஸ்லீம் மக்களுக்கான தீர்வுகள் எதுவும் கிடைக்கவில்லை.பிரபாகரன இனி வந்து என்ன தர போகின்றார். அவராலும் அது முடியாது.

நேதார்ஜி அஸ்ரப் போன்றோர்களும் இறந்த போதிலும் இவ்வாறு அவர்கள் உயிருடன் திரும்பி வருவார்கள் என மக்கள் மத்தியில் கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன.அது போன்று தான் பிரபாகரனின் விடயமும் கதையாக வெளிவந்துள்ளது.

ஆனால் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்றால் அவர் ஒழித்து கொண்டிருக்கின்றார் என்பதில் எனக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை என குறிப்பிட விரும்புகின்றேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *