இந்தியாவின் 73 வது குடியரசு தினம் இன்று கொண்டாட்டம்

புதுடெல்லி, ஜனவரி 26: இந்தியாவின் 73வது குடியரசு தினம் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இந்திய தலைநகர் டெல்லி உள்பட முக்கிய நகரங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தலைநகர் டெல்லியில் பயங்கரவாத தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மாநகரம் முழுவதும் முக அடையாளம் காணும் கண்காணிப்பு கமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி நடைபெறுகிறது. குடியரசு தின விழா நடைபெறும் பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடியரசு தின விழாவையொட்டி முப்படைகளின் அணிவகுப்பு, சாகசங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குடியரசு தின விழா காலை பத்தரை மணியளவில் தொடங்கி, நண்பகல் 12 மணிக்கு நிறைவடைகிறது.

விழா தொடங்கும் முன்பாக, தேசிய போர் நினைவிடத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். விஜய் சவுக் பகுதியில் இருந்து ராஜபாதை வழியாக தேசிய மைதானத்தை முப்படைகளின் அணிவகுப்பு நடைபெறுகிறது.

ராணுவ பலத்தை காட்டும் வகையில் அதிநவீன பீரங்கிகள், டாங்கிகள், ஆகாஷ் ஏவுகணைகள் அணிவகுப்பில் இடம்பெறும். மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர், அதிநவீன ட்ரோன்கள் உள்ளிட்ட நவீன போர் விமானங்கள் கொண்ட விமானப்படை சாகசமும் நடைபெற உள்ளன. தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட மாநிலங்கள் சார்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பும், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *