இந்திய மீனவர்களை கடுமையாகத் தாக்கிய இலங்கை தமிழ் மீனவர்கள்! சொத்துக்களும் அபகரிப்பு!

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களை, இலங்கை தமிழ் மீனவர்கள் கடுமையாகத் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வசந்தபாலன், மணிகண்டன், நிர்மல், தில்லைநாதன் ஆகிய நான்கு மீனவர்களே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர்.

நேற்றைய தினம், 6 மணியளவில் குறித்த நால்வரும் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சமயம், அங்கு இரண்டு படகுகளில் சென்ற 8 இலங்கை மீனவர்களில் 4 மீனவர்கள் இவர்களது படகில் ஏறி கட்டை, குத்தூசி மற்றும் கத்தியால் தாக்கியுள்ளனர்.

அத்துடன் குறித்த மீனவர்கள் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவி, தொலைபேசி, மீன்கள் 130 கிலோ, பேட்டரி, என்ஜின், பெட்ரோல்;, சிக்னல் லைட், ஐஸ் பாக்ஸ், டார்ச்லைட் ஆகியவற்றை பறித்துக் கொண்டு சென்றுள்ளனர்.

இலங்கை தமிழ் மீனவர்கள் தாக்குதலுக்கு இலக்காகிய வசந்த பாலனுக்கு இடது உள்ளங்கை, வாய், தலை ஆகியவற்றில் இரத்தக் காயமும், மணிகண்டனுக்கு வலது முன்தலையில் வெட்டுக் காயமும், நிர்மலுக்கு வலது முழங்கையில் உள்காயமும், தில்லை நாதனுக்கு பின் தலையில் காயமும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, மேற்படி மீனவர்கள் வேதாரண்யம் காவல் சரகம் ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு கரை திரும்பியுள்ளனர்.

இருசக்கர வாகனங்கள் மூலம் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு சென்று நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்படி 4 மீனவர்களின் வசந்தபாலன் மற்றும் நிர்மல் ஆகியோர் மேலதிக சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மற்றைய இரண்டு மீனவர்களான மணிகண்டன் மற்றும், தில்லைநாதன் ஆகிய இருவரும் மேலதிக சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி மீனவர்கள் அனைவரும் நேற்றுமுன்தினம் நாகப்பட்டினம் ஆரிய நாட்டுத் தெரு கடற்கரையிலிருந்து மீன்பிடிக்க சென்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *