கடனைத் திருப்பிச் செலுத்துவதில் இரண்டு வருட கால அவகாசத்தை மாத்திரமே சீனா வழங்கியுள்ளமையானது இலங்கையையும் உலக சமூகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
எனினும் இந்தியா, ஜப்பான் போன்ற கடன் கொடுனர்கள் 10 வருடகால கடன் இரத்தையும் 15 வருடக்கால மறுசீரமைப்பையும் வழங்கியுள்ளன.
இந்தநிலையில், குறிப்பாக சீனாவிடம் கடனைப் பெற்றுள்ள ஆபிரிக்க நாடுகள், தமது அச்சத்தை வெளியிட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தினால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி மற்றும் ஆட்சிக் கவிழ்ப்பு என்பன ஆபிரிக்க நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையை தளமாகக் கொண்ட டெய்லி பினான்சியல் ரைம்ஸின் கூற்றுப்படி, இலங்கைக்கு சீன எக்ஸிம் வங்கியின் நிலுவையில் உள்ள கடன் 4,023 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வேண்டியுள்ளது. இதில் 2,950 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சீனா டெவலப்மென்ட் வங்கிக்கு செலுத்தவேண்டியுள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி நேபாளம், பங்களாதேஷ், மாலைதீவு, மியான்மர் மற்றும் பல ஆபிரிக்க நாடுகளுக்கு ஒரு பாட மாகும்.
சீனாவை பொறுத்தவரை, பொருளாதார மற்றும் புவிசார் அர சியல் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான அதன் பட்டுப்பாதை முயற்சிக்காக பல நாடுகளுக்கும் பாரிய கடன்களை வழங்கியுள்ளது. 2012 முதல் 2017 வரை, ஆபிரிக்காவில் உள்ள நாடுகளுக்கு சீன கடன்கள் ஆண்டுக்கு 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
இந்தநிலையில் குறைந்த வருமானம் கொண்ட 22 ஆபிரிக்க நாடுகள் ஏற்கனவே கடன் நெருக்கடியில் உள்ளன அல்லது கடன் நெருக்கடியில் அதிக ஆபத்தில் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 2000 மற்றும் 2020 க்கு இடையில் ஆபிரிக்காவின் மொத்த வெளிநாட்டுக் கடன் ஐந்து மடங்கு அதிகமாக அதிகரித்து 696 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது என்றும் ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஆபிரிக்க நாடுகளுக்கான கடன் பொறியை தாம் உருவாக்கியுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.