
கொழும்பு, ஜனவரி 26:
மேல்மாகாணத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் புதன்கிழமை காலை 7.00 மணி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை துணை மருத்துவத் தொழிற்துறைகளுக்கான கூட்டுப் பேரவை ஆரம்பித்துள்ளது. இதனால். நோயாளிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்.
இந்த போராட்டம் தொடர்பாக துணை மருத்துவத் தொழிற்துறைகளுக்கான கூட்டுப் பேரவையின் தலைவர் ரவி குமுதேஷ் கூறுகையில் “துணை மருத்துவ சேவை, தாதியர் சேவை, பரா மெடிக்கல் சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகளைத் தீர்க்க சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து இந்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளோம்.
இந்த சம்பள முரண்பாடுகள் மற்றும் நிர்வாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண கோரி நாங்கள் ஏற்கனவே மாகாண மட்டத்தில் 8 தடவைகள் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டோம். ஆனால், அரசிடம் இருந்து உரிய பதில் கிடைக்காத நிலையில் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளோம்.
சுகாதார அமைச்சகமும், அரசாங்கமும் இதில் தலையிட்டு நியாயமான தீர்வுகளை வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.