
ஜோசப் நயன்
இலங்கையின் உள் நாட்டு பொருளாதாரத்தில் முக்கிய வகிபாகமாக இருப்பதுடன் குறிப்பிட்டளவு அந்நிய செலாவணியை பெற்று தரும் தொழிலாக இருப்பது மீன்பிடியாகும்.
இலங்கையின் வடக்கே பருத்தித்துறை தொடக்கம் தெற்கே காலி, மாத்தறை வரையான கடற்கரை பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளை மையப்படுத்திய பொருளாதார நிலமையே காணப்படுகின்றது
இலங்கையின் கரையோரப்பகுதிகளை பொருத்த வரையில் மீன்பிடி, கருவாடு உற்பத்தி மற்றும் சுற்றுலா துறையை முக்கியப்படுத்தினாலும் கரையோரப்பகுதிகளில் மீன் பிடியை நம்பி வாழ்வாதாரத்தை கொண்டு நடத்தும் குடும்பங்களே அதிகம்.
அதிலும் குறிப்பாக வடமாகாணத்தில் உள்ள மன்னார் மாவட்டத்தில் சுமார் 10,000 மேற்பட்ட குடும்பங்கள் மீன்பிடி அதை சார்ந்த உப உற்பத்திகள் ஊடாகவே அன்றாட வாழ்கையை கொண்டு நடத்துகின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் முள்ளிக்குளம் ,சிலாவத்துறை, அச்சங்குளம், வங்காளை, தலைமன்னார், பேசாலை, தேவன்பிட்டி, விடத்தல்தீவு, பள்ளிமுனை உட்பட பல கிராமங்கள் மீன் பிடித்தொழிலை மையமாக கொண்ட கிராமங்கள் ஆகும்.
இங்குள்ள பெரும்பாலான மீனவர்கள் கண்ணாடியிளை படகுகள் மற்றும் வள்ளங்களை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
என்னும் சில பகுதிகளில் தூண்டல்கள், சுழியோடல் மற்றும் கட்டுவலை, கரவலை மூலம் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் வழிச்சல் வலை, சுருக்கு வலை, லைலா வலை, போன்ற முறைகளையும் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மன்னார் மாவட்டத்தை சூழ உள்ள கடற்பரப்பின் தன்மை, கடற்பரப்பின் தட்பவெப்ப நிலை, மற்றும் முருகை கற்பாறைகளின் பரவல், கடலடிதள மேடைகள் அதிகமாக காணப்படுவதனால் மன்னார் கடற்பரப்பில் மீன்கள் அதிகமாக காணப்படுவதுடன் மீன் உற்பத்தி திறனும் அதிகமாக காணப்படுகின்றது.
இந் நிலையில் யுத்தம் நிறைவடைந்த பிற்பாடு வடக்கு கடல் எல்லை பகுதிகளில் இந்திய மீனவர்களின் அத்து மீறிய மீன்பிடி நடவடிக்கை மற்றும் இழுவை படகின் மூலமான கடற்தொழில் நடவடிக்கை காரணமாக மன்னார் மாவட்ட கடல் வளம் மற்றும் மீன் வளம் முற்றாக நாசமடைவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.
கடற்பரப்புக்களில் உள்ள இயற்கை பல்வகைமையை அழிக்கும் விதமாக பாரிய மடிகளை பயன்படுத்தி தடை செய்யப்பட்ட ‘அடிமட்ட வலைபாச்சலின்’ ஊடாக கடலின் அடிப்பகுதியில் உள்ள அனைத்து வளங்களையும் அள்ளி செல்வதுடன் அளவு வித்தியாசம் இன்றி அனைத்து அளவிலான மீன்களையும் அள்ளி செல்கின்றது இந்திய மீனவர்களின் இழுவை படகுகள்.
இவ்வாறான பாரிய இயந்திரங்களை பயன்படுத்தி கடல் அடிமட்டத்தில் பாரிய சங்கிலிகளால் பொருத்தப்பட்டிருக்கும் மடி வலைகளால் மீன்கள் அள்ளப்படும் சமயத்தில் கடலின் அடிப்பகுதியில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் முறைகை கற்பாறைகள், மீன்கள் மறைந்து வாழும் வாழிடங்கள், இயற்கை தாவரங்கள்,சேறுகள் மற்றும் பல வகையான பாசிகள் என எல்லாம் அள்ளி செல்லப்படுகின்றது.
இலங்கை மீனவர்களின் மூலம் நாள் ஒன்றுக்கு பிடிக்கப்படும் மீனின் அளவை விட இந்திய இழுவை படகு ஐந்து மடங்கு அதிகளவான மீன்களை அள்ளி செல்வதுடன் கடல் வளங்களையும் அழித்து செல்கின்றது.
பொதுவாக மீனின் இனப்பெருக்கமும் வளர்ச்சியும் கடலடித்தள மேடை பகுதி என சொல்லப்படும் ஊழுNவுஐNநுNவுயுடு ளுர்நுடுகு ஆழ்கடல், களப்பு ஆகிய கடலுக்கு இடைப்பட்ட பகுதியிலேயே நடை பெறுகின்றது.
இவ்வாறான கடலடித்தள மேடைப்பகுதி பெரும்பாலும் யாழ்பாணத்தின் காங்கேசன் துறை மற்றும் மன்னாருக்கும் முல்லைத்தீவுக்கும் இடைப்பட்ட பகுதிகளிளேயே அதிகளவாக காணப்படுகின்றது.
இதன் நீளம் அன்னளவாக 480 கிலோ மீற்றராகவும் அகலம் 60 கிலோ மீற்றர் வரை உள்ளது இதனை அடிப்படையாக கொண்டே இந்திய மீனவர்களின் வருகை அதிகளவில் மன்னார் மாவட்டத்தை அடிப்படையாக கொண்ட கடல் பகுதிகளிலும் அதே நேரம் யாழ்பாணத்தின் காங்கேசன் துறைபகுதியிலும் குறிப்பிட்ட அளவும் காணப்படுகின்றது.
இந்திய மீனவர்களின் அத்து மீறிய மற்றும் ஆபத்தான மீன்பிடி நடவடிக்கை காரணமாக வட பகுதி மீன் வளம் முற்று முழுவதும் சூறையாடப்படுவதுடன், கடல் வளங்களும் அழிக்கப்படுகின்றது. அதுமாத்திரமின்றி கடல் நீர் மற்றும் இயற்கை சூழலும் மாசடைகின்றது.
குறிப்பாக இழுவைப்படகின் மூலம் சர்வ சாதரமாக அள்ளி செல்லப்படும் கடல் அணிமனி என கூறப்படும் விலங்கி புறவன்கூடு அதாவது முறுகை கற்பாறைகள் மீண்டு உருவாக பல ஆயிரம் ஆண்டுகள் தேவைப்படுகின்றது.
ஸ்பெயின் நோர்வே உட்பட பல நாடுகள் இவ்வாறான இழுவை படகு மூலமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈட்பட்டதன் காரணமாக தற்போது அந்த நாட்டில் உள்ள மீன் வளங்கள் பாரிய அளவில் அழிந்துள்ளது.
தற்போது அந்த நாடுகள் தங்கள் நாட்டில் மீன் பிடி நடவடிக்கை மேற்கொள்ள முடியாமையினால் கடல் எல்லைகளை தாண்டி சில ஆபிரிக்க நாடுகளின் கடல்பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குறித்த நாடுகளின் மீன் வளம் பழைய நிலைக்கு திரும்ப சுமார் 100 வருடங்களுக்கு மேலான காலப்பகுதி தேவை என நிபுணர்கள் கணித்துள்ளனர்
இதே போன்ற ஒரு பின்னனியிலேயே இந்திய இழுவைபடுகுகளின் வருகையும் எமது நாட்டுக்குள் நோக்கப்பட வேண்டும்.
இந்திய கரையோரப்பகுதிகளில் குறிப்பாக தமிழ் நாட்டை சூழ உள்ள தனுஸ்கோடி பாம்பன், ராமேஸ்வரம், தங்கச்சி மடம் பேன்ற பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் 30 வருடங்களுக்கு மேலாக அப்பகுதிகளை சூழ உள்ள கடல் பகுதிகளில் இவ்வாறான இழுவை படகுகளை பயன்படுத்தி ‘அடிமட்ட மடி வலைகள்’ ஊடாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே அப்பகுதிகளில் தற்போது மீன் வளம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது,அந்த பகுதிகளின் மீன்களின் இனப் பெருக்கமும் சடுதியாக குறைந்துள்ளது.
அதனை மையப்படுத்தியே தற்போது பெரும்பாலான தமிழக மீனவர்கள் மன்னார் கடல் பரப்பை நோக்கி தங்கள் பார்வையை திருப்பியுள்ளனர்.
இலங்கை கடற்படையின் தீவிர கண்காணிப்பு, மற்றும் தாக்குதல், தொடர் ரோந்து நடவடிக்கை இவை எல்லாவற்றையும் தாண்டி துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம் பெற்றாலும் இந்திய மீனவர்களின் வருகை நின்றபாடில்லை.
இவ்வாறன இந்திய மீனவர்களின் வருகையின் பின்னனியில் வெறுமனே வருமானம் மட்டுமே நோக்காக கொள்ளப்பட்டால் இலங்கை கடற்படையின் ரோந்து நடவடிக்கையே அவர்களை திருப்பி அனுப்பி விடும்.
ஆனாலும் இதன் பின்னால் உள்ள பல பண முதலைகளின் இலாபத்திற்காக வருமானம் இன்றி போதிய கல்வி இன்றி வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் பல அப்பாவி தமிழக மீனவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர் என்பதே உண்மை.
இலங்கை கடல் எல்லையில் அத்துமீறிய மீன் பிடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்படும் பெரும்பாலான மீனவர்கள் நாட் கூலிக்காக இழுவை படகுகளில் ஏற்றப்படும் அப்பாவிகளே இவர்களுக்கு பின்னால் உள்ள முதலாலிகளின் முகங்கள் பெரும்பாலும் மறைவாகவே உள்ளது.
இந்த நிலையில் இலங்கை மீனவர்கள் தங்கள் தொழிலை தக்க வைப்பதுடன் மீன் வளங்களை பாதுகாக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.
வெறுமனே போராட்டங்கள் ஊடாக இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்த முனைவது சாத்தியமற்றதே மாறாக இரு நாட்டு மீனவர்களும் சர்வதேச கடல் எல்லை சார்ந்த பகுதிகளின் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், இலங்கை மீனவர்களும் ஆழ்கடல் மீன்பிடி போன்ற மீன்பிடி நடவடிக்கைகளுக்கு தம்மை தயார்படுத்துவது சிறந்ததாகும்.
இதை விடுத்து இதை இரு நாடுகளின் இராஜதந்திர பிரச்சினை என அரசியல் மயப்படுத்தாது இரு தரப்புக்களும் நடைமுறப்படுத்தக்கூடிய காத்திரமான முடிவுகளை பேச்சு வார்தைகள் மூலமும் கலந்துரையாடல் மூழமும் எடுக்கும் போதே எமது வளம் பாதுகாப்படும் என்பதுடன் தமிழகத்துடனான இணக்கமான சூழல் ஏற்படும் அதை விடுத்து போராட்டங்களும் கட்டமான செயற்பாடுகளும் இடர்பாடுகளையே ஏற்படுத்தும் என்பதே நிதர்சனம்..