
மூதூர் கடல்பயண மரணத்தின் 29ம் ஆண்டு நினைவு தினம் நேற்றாகும்.
திருகோணமலை மாவட்டம் மூதூர் வரலாற்றில் என்றுமே நெஞ்சங்களை விட்டு அகலாத சோகமும், கண்ணீரும், அவலக் குரல்களும் எதிரொலித்த நாள்தான் 1993 ஜனவரி 25ஆம் திகதியாகும்.
1993.01.25 ஆம் திகதி அன்று பிற்பகல் 2.30 மணியளவில் திருகோணமலை ஜெட்டியிலிருந்து மூதூரை நோக்கி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 130 பயணிகளுடன் பயணித்த மூதூர் தனியார் இயந்திரப் படகு திருகோணமலைக்கு அண்மையில் உள்ள பாதாள மலையை நெருங்கியதும் சீறி எழுந்த பாரிய கடல் அலைகளால் மூர்க்கத்தனமாக மோதப்பட்டு கடலுடன் சங்கமமானது.
படகில் பயணம் செய்தவர்களில் 30 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டதுடன் 13 பேரின் சடலங்கள் மட்டுமே மக்களால் மீட்கப்பட்டது.
இக்கோரச் சம்பவம் நிகழ்ந்து நேற்றுடன் (25) 29 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனாலும் அந்தக் கொடூரச் சம்பவத்தை மூதூர் மக்களின் மனத் திரையில் இருந்து மறைக்க முடியாதுதான்.
அப்போதைய காலங்களில் திருமலையிலிருந்து மூதூருக்கு கடல் வழிப் பயணம் மேற்கொள்வதானால் கடல் வழியாகப் 12 கிலோ மீற்றர் தூரம்தான். ஆனால் அந்த தூரத்தை ஒன்றரை மணி நேரமாக இயந்திரப் படகுகளில் பயணிக்க வேண்டும்.
ஒரு படகில் சுமார் 150 பிரயாணிகள் மாத்திரமே பிரயாணம் செய்ய முடியும். காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரையும்தான் இரண்டு படகுகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்தன.
நாளாந்தம் இப்படியாகத்தான் மூதூர் பயணச் சேவை இருந்து வந்தது. மாலை 5.00 மணிப் படகைத் தவறவிடும் அரசாங்க ஊழியர்களும் ஏனைய பொது மக்களும் திருமலையில அன்றைய இரவைக் கழிக்க வேண்டிய நிலையும் நாளாந்தம் ஏற்பட்டு வந்தது.
மூதூர் மக்களின் சகல தேவைகளும் திருமலையில் அமைந்துள்ளதால் நாளாந்தம் மூதூர் மக்கள் திருமலைக்குப் பிரயாணம் செய்ய வேண்டிய கட்டாயத் தேவையிருந்தது.
அப்போதைய காலங்களில் மூதூர் தமிழ் மக்கள் மட்டுமல்லாது முஸ்லிம் மக்களும் இராணுவக் கெடுபிடிக்குள் சிக்கித் தவித்த வரலாறும் உள்ளது.
