13 வேண்டாம், ஆனால் முதலமைச்சராக வேண்டும்: முன்னணியில் இருவர் முண்டியடிப்பு! – சுரேஷ் குற்றச்சாட்டு

13 ஆவது திருத்தம் தமிழ் மக்களுக்கு ஏற்புடையது அல்ல என கூறும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளருக்கு சுகாஷ் மற்றும் காண்டீபன் ஆகியோருக்கிடையில் பிடுங்குப்பாடு நிலவுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

13ஆவது திருத்தச் சட்டம் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வு கிடையாது அதில் நாம் வெளிப்படையாகவே இருக்கிறோம்.

ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளினால் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி இருக்கிறோம்.

13 நாம் இந்தியாவிடம் கேட்பதற்கு காரணங்கள் இருக்கின்றது. தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் எமக்கு இருக்கின்ற குறைந்தபட்ச அதிகாரமாக 13வது திருத்தமே காணப்படுகிறது.

இதை இந்தியாவுக்கு நாம் வலியுறுத்தியுள்ளோம். இந்தியா – இலங்கை அரசை எவ்வாறு கையாளப் போகின்றது என்பதைப் 13 ஆவது திருத்தம் நடைமுறைக்கு வரும் போதே அறிந்து கொள்ளலாம்.

சிலர் 13ஆவது திருத்தம் தமிழ் மக்களுக்கு தேவை அல்ல என போராட்டம் நடத்துவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களிடம் நான் ஒன்றைக் கேட்கிறேன் 13ஆவது திருத்தச் சட்டம் வேண்டாம் என கூறுகின்றவர்கள் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடப்போவது எதற்கு?

அதுமட்டுமல்லாது அவர்களின் கட்சிக்குள் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற போட்டி மேலோங்கி இருக்கின்ற நிலையில் இவர்களின் நோக்கம் என்ன.

வடக்கு மாகாண சபையை கைப்பற்ற 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்யப் போகிறார்களா அல்லது மாகாணசபையினால் வழங்கப்படுகின்ற சுகபோகங்களை அனுபவிக்க போகிறார்களா? என்பதை பகிரங்கமாக கூற வேண்டும்.

முன்னணியினர் 13ஆம் திருத்தம் தேவையில்லை, அதை அமுல்படுத்துமாறு கூறுபவர்களை எதிர்க்க வேண்டும் என வீதிகளில் கூறுவதை விடுத்து சமஷ்டியை எவ்வாறு ஏற்படுத்தப் போகிறோம் என்பதை மக்களுக்கு கூற வேண்டும்.

சீனா ஆதிக்கம் வடக்கில் மேல் ஆகியுள்ள நிலையில் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதுவதை உறுதி செய்யவேண்டிய தேவை இந்தியாவுக்கே அதிகம் உள்ளது.

தமிழ் மக்களின் காணிகளை அரசாங்கம் பறித்து வருகின்ற நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தும் அவற்றையும் சாதிக்க முடியவில்லை.

13 இன் மூலம் மாகாண சபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை செயற்படுத்துவதற்கு மாகாண சபை ஒன்று நடைமுறையில் இருக்கும் போதே ஓரளவேனும் கட்டுப்படுத்தலாம்.

ஆகவே 13 வேண்டாம் என மக்களை குழப்புவதை விடுத்து சமஷ்டியை எவ்வாறு பெறலாம் என்பதை கூறுங்கள் நாமும் இணைந்து பயணிக்க தயாராக இருக்கிறோம். – என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *