
நாட்டில் உண்மையான நல்லிணக்கம் உருவாக விரும்பினால் முதலில் மூன்று முக்கிய விடயங்களை செய்யுங்கள் என ஜனாதிபதிக்கும் அரசில் உள்ளவர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன நல்லிணக்கத்தை உருவாக்கி நாட்டில் சாந்தியும் சமாதானமும் உருவாக
ஜனாதிபதியும் அவரின் அரசாங்கமும் உண்மையாக உழைக்க
விரும்புகின்றார்கள் என்றால் முதலில் பின்வருவனவற்றை அவர்கள் செய்யமென மூன்று முக்கிய அறிவுரைகளை பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
அதாவது, தொல்பொருள் திணைக்களம், வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் பல திணைக்களங்கள் தற்போது வடக்கு கிழக்கில் நடத்தி வருகின்ற இன கலாச்சார அழிப்பின் மூலம் வடக்கு கிழக்கு மாகாணங்களின் இனப் பரம்பலை மாற்றி புதிய வரலாற்றை பிறழ்வாக எழுத எத்தனிக்கும் செயற்பாடுகளை உடனே நிறுத்த வேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறையில் இருக்கும் தமிழ் அரசியல்
கைதிகளை உடன் விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு, உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஜனாதிபதிக்கு மனமிருந்தால் மேற் கண்ட மூன்று விடயங்களையும் உடனே செய்ய வேண்டும். அதன் பின்னர் தான் புதிய தொரு சமஷ்டி அரசியல் யாப்பை எமது ஜனநாயக சோஷலிச குடியரசுக்காக வரைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் கொள்கை விளம்பல் பற்றிய கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கடந்த 24ம் திகதி, அவர் ஆற்றிய உரையிலேயே மேற்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவரது உரையில் மேலும் தெரிவிக்கையில்,
தமிழர் பற்றி ஜனாதிபதியினிடம் இருந்து நல்லுறவு பற்றிய வாசகங்கள்
பலவாறாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரிடம் இருந்து எமக்கு கிடைத்த
ஒரேயொரு கோரிக்கை ‘உங்கள் மக்களை மறந்துவிடுங்கள், வாருங்கள்,வந்து
என்னுடன் சேர்ந்து அபிவிருத்தி வேலையில் ஈடுபடுங்கள்’ என்பதே.
2022 ஆண்டுகளுக்கு முன்னர் சிலுவையில் மரித்த ஒருவர் தீர்க்கதரிசி வாசகம்
ஒன்றை விட்டுச் சென்றார். ‘மனிதனானவன் ரொட்டித் துண்டை மட்டும் நம்பி
வாழ்வதில்லை’ என்பதே அந்த வாசகம்.
ஜனாதிபதி நாங்கள் எங்கள் உறவுகளைப் புறக்கணித்து, எமக்கு வாக்களித்தவர்களைக் கைவிட்டு, சிங்கள ஏகாதிபத்தியத்திடம் சிக்கித் தவிக்கும் எம் மக்களை ஏங்கவிட்டு, அரச திணைக்களங்களிடமும் அரச படைகளிடமும் தமது காணி பூமிகளைப் பறிகொடுத்தவர்களை அசட்டை செய்து தன்னுடன் சேர்ந்து எம் மக்களுக்கு ரொட்டி கொண்டு செல்ல அழைக்கின்றார்.
3000 வருடங்களுக்கு மேலான கலாசாரத்தையும் நாகரீகத்தையுங் கொண்ட
வடகிழக்கு தமிழர்களை ஒரு ரொட்டித் துண்டைக் கொடுத்து வாங்கிவிடலாம்
என்று நினைக்கின்றார்.
அரச படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, இருக்கும் சொற்ப அரசியல் உரிமைகளையும் பறிகொடுத்து, பயமுறுத்தல்களுக்கு ஆளாகி இருக்கும் போது அவர்களைப் பட்டினி கிடக்க வைத்து திக்குமுக்காடச்
செய்தால் தமது உரிமைகளை ஒரு பானைக் கஞ்சிக்கு அடகு வைக்கக்
கூடியவர்கள் எம் மக்கள் என்று நினைக்கின்றார்.
அவரின் அரசியல் அனுபவமின்மை இதிலிருந்து புலப்படுகின்றது.
ஜனாதிபதியின் கொள்கை விளம்பலானது அவர் இதுகாறும் நடந்த எதற்கும்
மனவருத்தப்படுவதாகக் காட்டவில்லை.
வருங்காலமாவது நல்லிணக்கத்துடன்
மலர வேண்டும் என்ற அபிலாசையைக் கொண்டதாவும் அமையவில்லை.
தான் இது வரை செய்தவற்றை பெருமையுடன் எடுத்தியம்பியுள்ளார். ஆனால்
அவைதான் நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு இன்று இட்டுச் சென்றுள்ளன.
எமது நாட்டை ஆபத்து நேரத்தில் உதவிக் காத்தவர்களைக் கூட அவர் பெயர்
குறிப்பிட்டு நன்றியறிதல்களைக் கூறவில்லை.
மஞ்சள் நிற ஹுஆரென் இன வழித்தோன்றல்கள் அல்லாதவர்களுக்கு
நன்றிகளை நவின்றால் அவ்வினத்தவர்க்குக் கோபம் வந்துவிடும் என்று
அஞ்சுகின்றார் போலும்.
இந்நாட்டின் சிறுபான்மையினரைப் பயப்படுத்திப் பீதிகொள்ளச் செய்த ஜனாதிபதியும் அவர் போன்றவர்களும் ஹுஆரென்
இனத்தவர்களின் சினத்திற்குப் பயப்படுகின்றார்கள் போலும்.
படித்த பண்புடைய சிங்களவர்கள் உட்பட உலகத்தவர் யாவரும் இன்று
இலங்கை இவ்வாறாக என்றுமில்லாத ஒரு வங்குரோத்து நிலையை அடைய
தீர்க்கப்படாத இனப்பிரச்சனையே காரணம் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
நாட்டின் வருமானத்தில் கிட்டதட்ட ஐந்தில் ஒரு பங்கு இன்று கூட கண்டறியாத
பாதுகாப்புக்கும் அரச படைகளைத் திருப்திப்படுத்தவுமே பாவிக்கப்படுகின்றது.
வருடப் போரானது எமது பெரும்பான்மையினத் தலைவர்கள் இனப்
பிரச்சனையைத் தீர்க்க முன்வராததாலேயே நிகழ்ந்தது. அப்படியிருந்தும்
ஜனாதிபதி இந்நாட்டில் ஒரு இனப்பிரச்சனை இருப்பதை ஏற்க மறுத்து
தமிழர்களுக்கு இருப்பது பொருளாதாரப் பிரச்சனை ஒன்றே என்கின்றார்.
பூனை கண்களை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டுபோய்விட்டது என்று
எண்ணுமாம். அப்படித்தான் உள்ளது ஜனாதிபதியின் நிலை.
இன்று நாட்டில் இருக்கும் இன முரண்பாட்டை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளாதது அல்லது ஏற்க மறுப்பது, சமாதானமும் செல்வச் செழிப்பும் இந்த நாட்டைப்பல
வருட காலங்களுக்குப் புறக்கணிப்பன என்பதைக் கட்டியம் கூறி நிற்கின்றன.
ஒரு கல்லூரி மாணவன் கூட இந்த நாடு இன்று துன்பப்படுவது, இன
முரண்பாடுகளை நாங்கள் இதுகாறும் சரிசெய்யாததால்த்தான் என்பதை
அறிவான்.
ஆனால் மாண்புமிகு ஜனாதிபதி மட்டும் ஒரு சில
பொருளாதார ரொட்டித்துண்டுகளை வடகிழக்குத் தமிழ் மக்களின் முன் வீசினால் அவர்கள் திருப்திப்படுவார்கள் என்று நினைக்கின்றார்.
ஒரு நாட்டில் அரசியல் பிரச்சனை என்று ஒன்றிருந்தால் அது பற்றி செய்ய
வேண்டிய புத்திசாலித்தனமானதும் விஞ்ஞான ரீதியுமானதுமான செயற்பாடு
என்னவென்றால் பிரச்சனை என்னவென்று முதலில் அடையாளம் காணவேண்டும்.
அதன்பின் அதனைக் கூர்ந்து ஆராய வேண்டும். எதற்காக அது உருவாகியது
என்பதைக் கண்டறிந்து இறுதியாக அதற்கான தீர்வைப் பெற்றுக் கொடுத்தல்
வேண்டும்.
எமது ஜனாதிபதி தற்போது அவர் முன் பூதாகரமாகத் தாண்டவமாடும் இனப்பிரச்சனையை ஏற்றுக் கொள்ள மறுத்து,
இல்லாத இனப் பொருளாதாரப் பிரச்சனைக்கு விடைகாணப் பார்க்கின்றார்.
தொடர்ந்து வந்த அரசாங்கங்களின் பிழையான பொருளாதாரக் கொள்கைகளால்இந்த நாட்டின் சகல இன மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
வடக்கு கிழக்கில் பெரும்பான்மையினராக வசிக்கும் தமிழ்ப் பேசும் மக்கள் கூட நாட்டின் பெரும்பான்மை சிங்கள மக்களுடனும் மற்றையவருடனும் பாதிப்புக்கு உள்ளாகி வருந்திக் கொண்டிருக்கின்றனர். எனினும் வடகிழக்கு மக்கள் தங்கள் அரசியல் பிரச்சனையைத் தீர்க்கத் திடசங்கற்பம் பூண்டுள்ளனர்.
இதை ஜனாதிபதி ஏற்க மறுக்கின்றார். இது இந்த நாட்டின் எதிர்காலத்திற்கு
உகந்ததாகாது.நாடு சுதந்திரம் பெற்ற நாள் முதல் இந்த நாட்டின் தமிழ்ப் பேசும் மக்கள் துயருற்றிருக்கின்றார்கள் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது.
சுதந்திரத்திற்கு முன்பிருந்தே வடகிழக்குக் காணிகளை அபகரிப்பது என்பது
தொடக்கம் பெற்றுவிட்டது. அடுத்து இந்த நாட்டின் செழுமைக்கு உழைத்த
இந்த நாட்டின் தமிழ்ப் பேசும் மக்களின் ஒரு பகுதியினர் வாக்குரிமை
அற்றவர்கள் ஆக்கப்பட்டார்கள்.
1956ல் மிக அருகிய தொகை கொண்ட சிங்களவர் வாழ்ந்த பொதுவாகச் சிங்களம் பேசப்படாத இடங்களில் எல்லாம் சிங்களமொழி திணிக்கப்பட்டது.
அப்போதைய அரசாங்கத்தின் பக்கச் சார்பான சட்டங்களுக்கு எதிராகத் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய போது வடமாகாணம் இராணுவ மயமாக்கப்பட்டது.
தமிழ் மாணவ மாணவியர் மேற்படிப்புக்கு செல்வதைத் தடுக்கும் விதத்தில் உயர் கல்விப் பரீட்சைகளில் சமன்படுத்தல் முறை கையாளப்பட்டது.
அதுமட்டுமல்லாது காலத்திற்குக் காலம் குழந்தைகளை அநியாயமாகக் கொன்றும், பெண்களைக் கற்பழித்தும் மற்றவர்களைக் கொன்றுகுவித்தும் நடத்தப்பட்ட கொலைக் கலவரங்கள் ஏராளம்.
இதன் காரணத்தால் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்கள் நாட்டைவிட்டு வெளியேறி புகலிடங்களைத் தேடிக் கொண்டனர். இவ்வாறான செயல்கள் யாவும் தொடர்ந்து வந்த அரசாங்கங்களால் அரங்கேறிய போது அவ் அரசாங்கங்கள் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சம்பந்தமான சர்வதேச உடன்பாட்டின் ஏற்பாடுகளையும்,பொருளாதார, சமூக, கலாசார உரிமைகள ; பற்றிய சர்வதேச உடன்பாட்டின் ஏற்பாடுகளையும் மறிவிட்டிருந்தன.
முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனப்படுகொலை அவற்றின் தொடர்ச்சியே,
தற்போதும் இவ்வாறான சர்வதேச சட்ட ஏற்பாடுகளின் மீறல்கள் வடக்கு
கிழக்கில் நடந்தேறிய வண்ணமே இருக்கின்றன.
உரிய காணியேற்பு நடைமுறைகளைப் பின்பற்றாமல் படையினர் உதவியுடன் அரச திணைக்களங்கள் தனியார் காணிகளைக் கையேற்றல், வட கிழக்கு வளங்களை முகவர்கள் ஊடாகவும் கூலிகள் ஊடாகவும் சூறையாடுதல் தமது பாரம்பரிய வாழ்விடங்களில் இருந்து தமிழரை விரட்டிவிட்டு மாகாணங்களுக்கு வெளியில் இருந்து கொண்டுவந்து பிற மக்களைக் குடியேற்றுதல், எமது மாணவர்கள் தமது பாரம்பரிய இடங்களில் மான்பிடிப்பதை தடுத்து அவர்களின் வாழ்வாதாரங்களை
அழித்தல், வடமாகாணத்தில் மட்டும் 65,000 ஏக்கர்களுக்கு மேற்பட்ட அரச
காணிகளைக் கையேற்று அவற்றில் படையினர் தொடர்ந்து வசித்து வர
இடமளித்தல் போன்ற யாவையுமே மேற்கூறிய சர்வதேச உடன்படிக்கைகளின் ஏற்பாடுகளுக்கு முரணானவை.
இவை இன்றும் வழக்கத்தில் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.
இவை யாவும் நடந்தேறுவதை ஏற்றுக் கொள்ளாமல் தமிழ் மக்களின்
பிரதிநிதிகளாகிய எங்களை அவருடன் சேர்ந்து பொருளாதார அபிவிருத்தியில் ஈடுபடுமாறு கோருவது, மேற்கூறிய சட்டவிரோதச் செயல்கள் இனியும் கட்டாயமாக வட கிழக்கில் தொடரப் போகின்றன என்பதைச் சுட்டிக்
காட்டுகின்றது.
அதுமட்டுமல்லாது கூடிய வேகத்துடனும் விசையுடனும் இவை
தொடர இடமுண்டு. இன்றைய எமது இந்த நிலையை இந்தியா உள்ளடங்கிய சர்வதேச நாடுகள் கவனத்திற்கு எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
ஜனாதிபதி தமிழ் மக்களின் பிரதிநிதிகளை, தம்மிடையே நிலவும்
முரண்பாடுகளைப் புறந் தள்ளி தன்னுடன் பொருளாதார அபிவிருத்தியில்
ஈடுபடுமாறு கோருவது சில சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.
போரின் போதும் அதன் பின்னரும் எம் மக்கள் இன்றைய நிலையிலும் பார்க்க
மோசமான பொருளாதார சிக்கல்களில் அகப்பட்டு துயருற்றிருந்தனர்.
அப்படியிருந்தும் எந்தக் காலத்திலும் எம்மவர்கள் அரசியல் கோரிக்கையைப்
பின்தள்ளி பொருளாதார அபிவிருத்தியை முதன்மைப்படுத்த முனையவில்லை.
போரின் பின்னரான 12 வருடகாலத்தில் கூட எம் மக்கள் தமது அரசியல்
உரித்துக்களைப் பெற்றுக்கொடுக்க முன்வந்தவர்களைத் தான் தமது
அதிகப்படியான பிரதிநிதிகளாக தேர்ந்தெடுத்தனர்.
அப்படியிருந்தும் எமது மக்களின் அபிலாசைகளை மதிக்காமல் எம்மை நோக்கி ஜனாதிபதி அரசியல் கோரிக்கைளைப் பின் தள்ளுங்கள் பொருளாதார செயற்பாடுகளுக்காக என்னுடன் சேருங்கள் என்கிறார்.
அதாவது நாங்கள் எங்கள் மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு எதிராகப் பயணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
எமது மக்களின் பொருளாதார ரீதியிலான பிரச்சனைகளை நாம் அறிவோம்
கடந்தகால பிழையான பொருளாதார கொள்கைகளின் நிமிர்த்தம் தற்போது
இந்த நாடு எங்கு சென்று கொண்டிருக்கின்றது என்பதையும் நாம் அறிவோம்
நாங்கள் எம் மக்களை ஏற்கனவே தற்சார்பு நடவடிக்கைகளில் இறங்கி தமக்குத் தேவையானவற்றில் தன்னிறைவு அடைய உழைக்குமாறு அறை கூவல் விடுத்திருக்கின்றோம்
எனினும் இந்த அரசாங்கம் எம் மக்கள் மீது உண்மையான கரிசனை கொண்டு
அவர்களுக்கு தேவையான பொருளாதார செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த முன்வந்தால் நாங்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து எமது மக்கள் நலன் சார்ந்து செயற்திட்டங்களை செயற்படுத்த எம்மாலான உதவிகள் அனைத்தையும் செய்வோம்.
ஆனால் எமது மக்களின் அரசியல் ரீதியான எதிர்பார்ப்புக்களை புறக்கணித்து ஜனாதிபதியுடன் சேர்ந்து ஒட்டுறவாடி எம் மக்களின் முதுகில் குத்த நாம் முன்வருவோம் என்று ஜனாதிபதி எண்ணக்கூடாது.
நிறைவு செய்யும் விதத்தில் ஒன்றைக் கூற விரும்புகின்றேன். இந்நாட்டின்
இனங்களுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தை உணராது ஜனாதிபதி அவர்கள் நெடுங் காலத்திற்குத் தன் கண்ணை மூடிக்கொண்டு இருக்கமுடியாது.
தன் எண்ணங்களுக்கு மாறாக தற்செயலாக தமிழ் பேசும் மக்களுடன் இன நல்லிணக்க செயற்பாடுகளில் ஈடுபடவேண்டிய கட்டாயம்
வந்தால் அவர் செய்ய வேண்டியவை பற்றி ஒரு சில வார்த்தைகள் கூற
ஆசைப்படுகின்றேன்.
அதாவது, அவர் முதலில் தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் மக்களின்
நம்பிக்கையை பெற முயற்சிக்க வேண்டும். அதாவது தனது குறிக்கோள்கள்
உள்ளெண்ணங்கள் என்ன என்பதை எம்மக்களுடன் பகிர்ந்து அவர்களின்
நம்பிக்கையை அவர் முதலில் பெறவேண்டும்.
இதனை ஒரு சாட்டாக வைத்து தனக்கிருக்கும் தற்போதைய பொருளாதார பிரச்சனைகளில் இருந்து தப்பவும் சர்வதேச நாடுகளில் எழுந்துள்ள மனிதவுரிமைகள் மீதான சர்ச்சைகளை
முடிவுக்குக் கொண்டு வரவும் ஒரு ஆயுதமாக இதைப் பாவிக்கக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.