பொதுஜன பெரமுனவின் தவறான ஆலோசனைகளை செவிமடுத்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனநாயகத்திற்கு எதிராக செயற்பட்டால் கோட்டாபய ராஜபக்சவிற்கு ஏற்பட்ட கதியே ஏற்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம எச்சரித்துள்ளார்.
மதுகம நகரில் நேற்று இடம்பெற்ற பிரச்சார நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
2022.மே மாதம் 09 ஆம் திகதி வன்முறை சம்பவத்தின் போது கடுமையான தாக்குதலுக்கு உள்ளானேன். பாரிய போரட்டத்திற்கு மத்தியில் உயிர் பிழைத்தேன். ஆகவே அரசியலில் இருந்து ஓய்வுப் பெற வேண்டிய தேவை தற்போது இல்லை. நாட்டுக்காக தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன்.
225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் திருடர்கள் என்று மக்கள் விமர்சிக்கும் நாட்டில் வாழ்கிறோம், தவறுகளை திருத்திக் கொண்டு இளம் தலைமுறையினருக்கு முன்னுரிமை வழங்கி சிறந்த மாற்றத்தை நோக்கி பயணிக்க வேண்டும்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடத்தமாட்டார் என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டேன்.பொதுஜன பெரமுனவிற்கு மக்கள் மத்தியில் செல்ல முடியாது இதனால் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிற்போடப்படும்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச அரசியலுக்கு பலவீனமானவர் என்று குறிப்பிட்டேன், அப்போது என்னை கடுமையாக சாடினார்கள்.
இறுதியில் இரண்டரை வருடத்திற்குள் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பலவீனமான அரச தலைவரான கோட்டாபய ராஜபக்சவை விரட்டியடித்தார்கள்என தெரிவித்தார்.