உற்பத்திதுறை சார்ந்தோருக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் என யாழ்ப்பான வணிக கழகத்தின் தலைவர் ஆர்.ஜெயசேகரம் தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாண வணிகர் கழகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் மின்சார கட்டணங்கள் 66% அதிகரிக்கப்பட்டுள்ளமையால் பல்வேறு துறைகளிலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே உற்பத்தி துறை சார்ந்தோருக்கு அரசாங்கம் கட்டாயமாக நிவாரணம் வழங்க வேண்டும்.
குறிப்பாக வர்த்தகத் துறை சார்ந்தோருக்கும் இந்த மின்கட்டன அதிகரிப்பானது பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் புதிய நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் பொருட்களின் விலை அதிகரிப்பானது மேலும் அதிகரித்து சாதாரண பொது மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் இடர்பாடுகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.
குறிப்பாக அரிசி ஆலைகள் அரிசி விலையை அதிகரிக்க இருப்பதாக சொல்லி இருக்கின்றார்கள். அதேபோல பல விடயங்கள் குறிப்பாக மின்சாரத்தில் தங்கி இருந்து உற்பத்தியில் மேற்கொள்ள சகலத்துறைகளும் விலை அதிகரிப்பினை மேற்கொள்வதற்குரிய சாத்தியக்கூறு காணப்படுகின்றன.
ஆகையால் இது சம்பந்தமான உற்பத்தி துறை சார்ந்தவர்களுக்கு அரசாங்கம் ஏதாவது ஒரு வகையில் அவர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும். அல்லது உற்பத்தி துறை சார்ந்த விடயங்களுக்கு மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் இது சம்பந்தமாக அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏனென்றால் ஏற்கனவே பல பொருளாதார சோதனைகளை தாங்க முடியாத இருக்கும் மக்கள் வர்த்தகத்துறை கைத்தொழிற்துறை அனைத்தும் மேலும் மின்சார கட்டண அதிகரிப்பால் மிக மோசமாக பாதிப்படைந்துள்ளது. ஆகவே விரைவில் அரசு நிவாரணம் கொடுக்க வேண்டும் தவறும் பட்சத்தில் பொருட்களின் விலை அதிகரிப்பினை தடுக்க முடியாத நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.