
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காகக் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 55 பேர் ஊர்காவற்றுறை நீதிமன்றால் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 19 மற்றும் 21 ஆம் திகதிகளில் இந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், ஊர்காவற்றுறை நீதிமன்றில் தமிழக மீனவர்களுக்கு எதிராக நேற்றுக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 55 மீனவர்களும் நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டனர்.
தமிழக மீனவர்கள் 55 பேருக்கும் 5 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 18 மாதச் சிறைத் தண்டனை விதித்தது ஊர்காவற்றுறை நீதிமன்று.
அதேவேளை ஓர் படகின் உரிமையாளரும் படகில் பயணித்த நிலையில், எல்லை தாண்டுவதைத் தடுக்கத் தவறியமையால் குறித்த படகு அரசுடமையாக்கப்பட்டது.
இந்த வழக்குடன் தொடர்புடைய ஏனைய 7 படகுகள் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.