
கச்சதீவு உற்சவம் எதிர்வரும் மார்ச் மாதம் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதில் பூஸ்டர் டோஸ் ஏற்றிய 500 பேரை மாத்திரமே அனுமதிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கச்சதீவு உற்சவ முன்னாயத்தக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து சுமார் 10 ஆயிரம் பேர் கச்சதீவு உற்சவத்தில் பங்கேற்பதற்கு கடந்த காலங்களில் அனுமதி வழங்கப்பட்டு வந்தது. கொரோனாப் பேரிடர் நிலைமை காரணமாக இந்தியப் பக்தர்களுக்கு இம்முறையும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த 500 பேர் வரையிலேயே கச்சதீவுத் திருவிழாவில் பங்கேற்க அனுமதிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த எண்ணிக்கையும், மார்ச் மாதம் திருவிழா காலப் பகுதியில் சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தால் வெளியிடப்படும் சுற்றறிக்கைக்கு ஏற்ப மாற்றப்படவும் வாய்ப்புள்ளது.
அத்துடன் உற்சவத்தில் பங்கேற்பவர்கள் அனைவரும் பூஸ்டர் டோஸூம் ஏற்றியிருக்க வேண்டும் என்று நேற்றைய கூட்டத்தில் சுகாதாரத் தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.