
கொழும்பு, ஜனவரி 27:
இலங்கை சிறைச்சாலைகளில் நிலவும் ஊழல் மற்றும் முறைகேடுகளை முறியடிக்கும் வகையில் ‘ஸ்ரீலங்கா சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை’ (SPEAT Force) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள திருத்தங்கள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் நடந்த ‘SPEAT Force’ இன் ஆரம்ப பாஸிங் அவுட் அணிவகுப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கமல் குணரத்ன பேசியது:
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்கசவின் வழிகாட்டுதலின் கீழ் ‘சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை’ உருவாக்கப்பட்டுள்ளது. இப் படையில் 500 வீரர்களை இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளோம். முதல் கட்டமாக, 194 பேர் பயிற்சி முடித்து இன்று வெளியேறுகிறார்கள்.
சிறைக் கைதிகளைக் கையாளும் போது சுய ஒழுக்கத்துடன் மனிதாபிமான அணுகுமுறையுடன் பணியாற்ற வேண்டும்.
சிறைத் தண்டனை முடிந்து மீண்டும் சமூகத்திற்குள் நுழைய முன்பு, இந்த கைதிகளை பயனுள்ள குடிமக்களாக மாற்றுவதற்கு உதவுவதும் உங்கள் கடமையின் ஒரு பகுதியாகும் என்று அவர் தெரிவித்தார்.
சிறைச்சாலைகளில் ஏற்படும் வன்முறை, போதை பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக இந்தப் படை அமைக்கப்பட்டுள்ளது.