வவுனியா பல்கலைக்கழகம், கல்வியற்கல்லூரி மாணவர்கள் 36 பேருக்கு கொரோனா!

வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் கல்வியற் கல்லூரி மாணவர்கள் 36 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவர்கள் இருவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் 1990 அவசர நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் 50 பேருக்கு எழுமாறாக துரித அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதில், மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அத்துடன், வவுனியா பல்கலைக்கழகத்தில் காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் தென்பட்ட மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் 20 பேருக்கும், வவுனியா பல்கலைக்கழகத்தில் 16 பேருக்குமாக 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தொற்றாளர்களை தனிமைப்படுத்துவதற்குரிய நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *