மின்வெட்டை அமுல்படுத்துவதா இல்லையா என்பது குறித்து இன்று தீர்மானம்

மின்வெட்டை அமுல்படுத்துவதா இல்லையா என்பது குறித்து இன்று (வியாழக்கிழமை) மாலை தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.

அத்தோடு, அனைத்து நிறுவனங்களுக்கும் நுகர்வோருக்கும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பரிந்துரைகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான தீர்மானம் இன்றுடன் காலாவதியாகியுள்ளதாகவும் இன்று மாலை நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் அதனை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

முன்னதாக, போதியளவு எரிபொருள் கிடைக்கப்பெற்றுள்ளதால் இன்று வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அண்மையில் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் இன்றைய தினத்தின் பின்னர் எரிபொருள் கிடைப்பதை பொறுத்து நிலைமை மீள்பரிசீலனை செய்யப்படும் எனவும் ரத்நாயக்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இலங்கை மின்சார சபையினால் பத்து நாட்களுக்கு போதுமான எரிபொருளைப் பெற்று, அதனைத் தொடர்ந்து ஜனவரி 30 ஆம் திகதி நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் செயற்பாடுகளை மீளத் தொடங்கினால், எதிர்காலத்தில் மின்வெட்டுத் தேவைப்படாது எனவும் குறிப்பிட்டார்.

மின்சாரம் தேவைக்கு போதுமானதாக இல்லை என்றும் இதன் விளைவாக, நுகர்வோர் மின்சாரத்தைப் பயன்படுத்தும்போது சுய கட்டுப்பாட்டை கடைப்பிடித்தால், அது அவசரகால சூழ்நிலைகளிலும் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதிப்படுத்த உதவும் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *