106 ஆவது பொன் அணிகளின் துடுப்பாட்டப் போட்டி- யாழ், புனித பத்தாசிரியர் கல்லூரி 23 ஓட்டங்களால் வெற்றி! SamugamMedia

106 ஆவது பொன் அணிகளின் துடுப்பாட்டப் போட்டியில் யாழ்ப்பாணம் புனித பத்தாசிரியர் கல்லூரி இனிங்ஸ் மற்றும் 23 ஓட்டங்களால் வெற்றிபெற்று கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

பொன் அணிகளின் போர் என வர்ணிகப்படும் யாழ்ப்பாணம் புனித பத்தாசிரியர் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிகளுக்குமிடையிலான 106 ஆவது துடுப்பாட்ட போட்டி நேற்று காலை ஆரம்பானது.

தொடர்சியாக இரண்டு நாட்கள் இரண்டு இனிங்ஸ்களாக நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி முதலில்களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய புனித பத்தாசிரியர் கல்லூரி 74 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 272 ஓட்டங்களை பெற்ற நிலையில் தனது முதல் இனிங்ஸை இடைநிறுத்தியது. துடுப்பாட்டத்தில் புனித பத்தாசிரியர் கல்லூரி சார்பில் அபிலாஸ் 54 ஓட்டங்களையும் சமிதன் 50 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில் யாழ்ப்பாண கல்லூரி சார்பில் பிருந்தன், நர்தனன், ரோய் ஜெனிசன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை பெற்றனர்.

பதிலுக்கு முதலாம் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி 42 ஓவர்களில் 70 ஓட்டங்களை மாத்திரம் பெற்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

துடுப்பாட்டத்தில் யாழ்ப்பாண கல்லூரி சார்பில் அதிகபட்சமாக மதுசன் 24 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பந்துவீச்சில், யாழ். புனித பத்தாசிரியர் கல்லூரி சார்பில் சாருசன், சதுர்ஜன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

202 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த யாழ். புனித பத்தாசிரியர் கல்லூரி துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை பலோன் ஆட்ட முறையில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கு வழங்கியது. 

அதனடிப்படையில் இரண்டாம் இனிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடிய வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி 64.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

துடுப்பாட்டத்தில் யாழ்ப்பாண கல்லூரி சார்பில் அதிகபட்சமாக மதுசன் 54 ஓட்டங்களையும், நர்தனன் 22 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில் யாழ். புனித பத்தாசிரியர் கல்லூரி சார்பில் சாருசன், அபிலாஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இதனடிப்படையில் 106 ஆவது பொன் அணிகளின் துடுப்பாட்டப் போட்டியை யாழ்ப்பாணம் புனித பத்தாசிரியர் கல்லூரி இனிங்ஸ் மற்றும் 23 ஓட்டங்களால் வெற்றிபெற்று கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக யாழ்ப்பாண கல்லூரி வீரர் மதுசனும் சிறந்த பந்துவீச்சாளராக புனித பத்தாசிரியர் கல்லூரி வீரர் சாருசனும் போட்டியின் ஆட்டநாயனாக புனித பத்தாசிரியர் கல்லூரிவீரர் அபிஸாஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *