
கயேந்திரகுமார் அணி கேட்கும் தீர்வு எத்தனை வருடத்தில் வரும்? என ஈ.பி.ஆர்.எல் .எப். இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
13 ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ் கட்சிகள் ,இந்திய பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில்,தெளிவு படுத்தும் ஊடகவியாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
தமிழ் தேசிய மக்கள் முன்னணி அடிக்கடி பூகோள அரசியல் பற்றி கதைப்பார்கள்.அதாவது சர்வதேச நாடுகளின் தலையீடு பற்றி அவர்கள் கூறுவார்கள்.
போருக்கு முன்னர் இருந்த நாடு வேறு.இப்போது உள்ள நாடு வேறு.முதலில் சீனாவை பற்றி நாம் கதைத்து இருக்க மாட்டோம்.இப்போது இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் 100 வருடத்துக்கு உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது.
இது இந்தியாவின் பாதுகாப்புக்கு பிரச்சினை என்று அவர்களுக்கு தெரியும்.
இந்த நிலையில் வடக்கில் சீனர்கள் வந்தால் இந்தியாவின் பாதுகாப்புக்கு பிரச்சினை.
தமிழ் தரப்பு இங்கே பலமாக இருந்தால் தான் இந்தியாவுக்கு பிரயோசனம்.இதை பயன்படுத்தி தான் நாம் சில வேலைகளை செய்விக்க வேண்டும்.இந்தியாவுடன் நாம் பேசும் களம் உருவாகும்.
அதை நாம் நட்புறவாக பயன்படுத்த வேண்டும்.ஆகவே எமது கோரிக்கைகளை கூட்டாக சேர்ந்து பலமாக முன்வைக்க வேண்டும்.
இதை விடுத்து 13 சவப் பெட்டியில் வைத்து கஜேந்திரகுமார் அணி இழுத்து செல்கிறது.
சரி உங்கள் வழிக்கே வருகின்றோம் நீங்கள் கேட்ட தீர்வு எத்தனை வருடத்தில்,வரும். அதற்கு என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்.
இப்படியே நீங்கள் கதைத்து கொண்டு இருங்கள்.கிழக்கில் தேரர் அட்டகாசம் நடக்கிறது,வடக்கில் சிங்கள குடியேற்றம்.இதற்கு என்ன செய்ய போகிறீர்கள்.
கஜேந்திரமரால் ஒன்றும் செய்ய முடியாது .ஒன்றுமே தெரியாத அப்பாவி தொண்டர்களை வைத்துக்கொண்டு கடை கடையாக பிரச்சாரம் செய்கிறார்கள்.
நாம் எப்படியாவது மக்களுக்கு ஏதும் செய்ய வேண்டும் என்று பார்க்கின்றோம்.அதற்காக எவ்வளவு தூரம் என்றாலும் நாம் செல்வோம்.
ஆகக் குறைந்தது மாலைதீவுடன் என்றாலும் கஜேந்திரன் அணி பேசுமா என்று தெரியவில்லை.
சொந்த லாபத்துக்காக ,முட்டாள் தனமான வேலை செய்கிறார்கள்.கிழக்கில் ஞானசாரதேரர்,யாழ்ப்பாணத்தில் கஜேந்திரமார் அணி ,என கோட்டா பிரிந்து விட்டுள்ளார் என்றார்.