ஒரு நாள் தொழிற்சங்க நடவடிக்கை மூலம் நீங்கள் சாதிக்கப்போவது என்ன? – ஜனாதிபதி கேள்வி SamugamMedia

“ஒரு நாள் தொழிற்சங்க நடவடிக்கை மூலம் நீங்கள் சாதிக்கப்போவது என்ன? அன்று வரியை நீக்கியமையால்தான் நாடு வங்குரோத்து அடைந்தது. அதனை நிவர்த்தி செய்யும் வகையில்தான் இன்று மீண்டும் வரியை விதித்துள்ளோம்.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இன்றைய தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே ஜனாதிபதி மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக தொழிற்சங்கங்கள் உள்ளன. ஆனால், எதிர்க்கட்சிகளின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் சில தொழிற்சங்கங்கள் சிக்கியுள்ளன.

வங்குரோத்து அடைந்துள்ள எமது நாடு மெல்ல மெல்ல மீண்டெழுந்து வருகின்ற நிலையில் தொழிற்சங்க நடவடிக்கை எதற்கு என்று குறித்த தொழிற்சங்கங்களிடம் கேட்க விரும்புகின்றேன். ஒரு நாள் தொழிற்சங்க நடவடிக்கை மூலம் நீங்கள் சாதிக்கப்போவது என்ன?

அன்று வரியை நீக்கியமையால்தான் நாடு வங்குரோத்து அடைந்தது. அதனை நிவர்த்தி செய்யும் வகையில்தான் இன்று மீண்டும் வரியை விதித்துள்ளோம். மின் கட்டணத்தில் அதிகரிப்பை மேற்கொள்ளாமல் மின் விநியோகத்தைச் சீராக மேற்கொள்ள முடியாது.

தற்போதைய நிலைமையில் ஓரிரு மாதங்களுக்கு விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாதது. எல்லாவற்றுக்கும் சர்வதேசத்திடம் நாம் கையேந்தி நிற்க முடியாது. நாம் மெல்ல மெல்ல சொந்தக் காலில் நிற்கப் பழகிக்கொள்ள வேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *