நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் – இலங்கை இன்று ஸ்தம்பிக்கும்..! SamugamMedia

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து துறைமுகங்கள், எண்ணெய், மின்சாரம், வங்கிகள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் இன்று (01) நாடு தழுவிய ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

எனினும், மருத்துவ, புகையிரத, ஆசிரியர் மற்றும் தபால் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதில்லை என்றும், போராட்டம் மாத்திரமே நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளன.

18 அரச மற்றும் தனியார் வங்கிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள நிலையில், இலங்கை வங்கியின் தொழிற்சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளது. 

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின், தொழிற்சங்க நடவடிக்கையை கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் சன்ன திஸாநாயக்க கூறியுள்ளார்.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கறுப்பு பட்டி அணிந்து அல்லது கறுப்பு ஆடை அணிந்து கடமைக்கு சமுகமளிப்பார்கள் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பெற்றோலியம், துறைமுகம், மின்சார தொழிற்சங்கங்களும் பங்கேற்கவுள்ளதாக துறைமுக இலங்கை சுதந்திர சேவை சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுதரகே குறிப்பிட்டுள்ளார். துறைமுக ஊழியர்கள் இன்று காலை 7 மணி முதல் 24 மணித்தியால பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக துறைமுக தொழிற்சங்கங்களின் பேச்சாளர் நிரோஷன் ரோகனகே தெரிவித்தார்.

தமது தொழிற்சங்க உறுப்பினர்களும் இன்றைய வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார சபை ஒன்றியத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமென தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில், துறைமுகம், விமான நிலையம் மற்றும் பயணிகள் போக்குவரத்து சேவைகள் தொடர்பான சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானி அறிவிப்பை அதிபர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுமுன்தினம் (27) இரவு வெளியிட்டிருந்தார்.

பயணிகள் அல்லது பொருட்களை ஏற்றிச் செல்வது, இறக்குதல், வண்டி ஏற்றுதல், சேமிப்பு, விநியோகம் மற்றும் உணவு மற்றும் குளிர்பானங்கள், சரக்குகள் அல்லது நிலக்கரி, எண்ணெய், எரிபொருள் போன்றவற்றை எந்தவொரு துறைமுகத்திலும் உள்ள கப்பல்களில் இருந்து கொண்டு செல்வதற்கான பொது போக்குவரத்து சேவைகள் இந்த வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அத்தியாவசிய சேவைகளாக ஆக்கப்பட்டுள்ளன.

இதன்படி, வீதிகள், பாலங்கள், கல்வெட்டுகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் புகையிரத பாதைகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல், வீதி, ரயில் அல்லது விமானப் பயணிகள் போக்குவரத்து சேவைகளுக்கு தேவையான வசதிகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல் உள்ளிட்டவை அத்தியாவசிய சேவைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *