
கொழும்பு, ஜனவரி 29:
உருளைக் கிழங்குப் பொதிகளுக்குள் மறைத்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 16,000 கிலோகிராம் பீட்ரூட்டை இலங்கை சுங்கப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பாக சுங்க பிரிவு மூத்த அதிகாரி கூறுகையில்
“பாகிஸ்தானில் இருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட உருளைக்கிழங்கு கப்பலில் இருந்த 2 கொள்கலன்களின் உள்ளடக்கம் 53,000 கிலோகிராம் உருளைக்கிழங்கு மட்டும் என இலங்கை சுங்கத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சுங்க அதிகாரிகள் இந்த கொள்கலன்களில் நடத்திய அதிரடி சோதனையில், உருளைக் கிழங்குப் பொதிகளுக்குள் மிகவும் நுட்பமான முறையில் அடைத்துக் கடத்தப்பட்ட16,000 கிலோகிராம் பீட்ரூட்டை கண்டுபிடித்துள்ளனர், இதன் சந்தை மதிப்பு ரூ. 3 மில்லியன் ஆகும்.
இந்த இரண்டு கொள்கலன்களும் வத்தளையில் உள்ள நிறுவனம் ஒன்றினால், இந்தியாவில் உள்ள நிறுவனம் ஒன்றிடம் இருந்து ஆர்டர் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை முடுக்கியுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.