
புத்தளம் மாவட்டத்திலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு ஜப்பானில் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் சிந்தனையில் உருவான சௌபாக்கியா வேலைத்திட்டத்தின் கீழ் இளைஞர், யுவதிகளுக்கு வெளிநாட்டில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் புத்தளத்தில் அதற்கான பதிவுகளும், ஒருநாள் செயலமர்வும் இன்று புத்தளம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் வேண்டுகோளுக்கிணங்க, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
பதிவுக் கட்டணம் மற்றும் மொழி உள்ளிட்ட பயிற்சிக்குரிய கட்டணங்கள் மாத்திரமே தெரிவு செய்யப்படும் இளைஞர், யுவதிகளிடமிருந்து அரசாங்கத்தினால் அறவிடப்படவுள்ளது.
அத்துடன், தொழில் வாய்ப்புகளுக்காக பதிவு செய்வோர், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் நிபுணத்துவம் பெற்றவர்களால் பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்னர், நடைபெறும் நேர்முகத் தேர்வு மற்றும் பரீட்சையில் சித்தி பெறுவோர் மாத்திரமே ஜப்பானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் வேண்டுகோளுக்கு இணங்க, குறித்த பயிற்சி நெறிகள் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்தப்படவுள்ளன.
குறித்த ஆரம்ப நிகழ்வில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் எம்.பி. ரன்தெனிய, ஜப்பான் நாட்டின் இலங்கை முகாமையாளர் கவஹார ஆகியோருடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சின் அதிகாரிகள், சமயத் தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

