
யாழ்ப்பாணம், வடமராட்சி – கிழக்கு வத்திராயனிலிருந்து கடலுக்கு சென்று இதுவரை கரை திரும்பாத இருவரையும் தேடும் பணி இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்றபோதும் இதுவரை எந்தவிதமான தகவல்களும் கிடைக்கவில்லை.
இன்று காலை 10 மணியிலிருந்து இதுவரை தொடர்பின்றிய இரண்டு மீனவர்களையும் தேடும் பணி இடம்பெற்ற நிலையில் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.
இச், சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த வியாழக்கிழமை பிற்பகல் கடற்றொழிலுக்கு சென்ற யோசேப் பிரேம்குமார், அருண்குமார் தணிகைமாறன் என்ற இரண்டு மீனவர்களுமே இவ்வாறு காணாமல் போயிருந்தனர். இவர்களை தேடும் பணியே இடம்பெற்று வருகின்றது.
நேற்றைய தினம் குறித்த மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட சக மீனவர்கள், குறித்த மீனவர்கள் தொழிலிற்;கு பயன்படுத்திய வலைகள் துண்டங்களாக காணப்பட்ட நிலையில் கரைக்கு எடுத்து வந்துள்ளனர்.
குறித்த மீனவர்கள் பாரிய இயந்திர படகில் மோதுண்டு மூழ்கடிக்கப்பட்டிருக்கலாமென உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர்.
