எங்கள் தமிழீழம் நிச்சயமாக மலரும்! – சிறிகாந்தா தெரிவிப்பு

தமிழ் மக்கள் தேசப்பற்றோடு, ஒற்றுமையோடு, இலட்சிய விசுவாசத்தோடு, ஓர் உயர்ந்த விடுதலைப் பாதையில் பயணிப்பதற்கு தங்களால் இயன்ற அனைத்தையும் செய்யக் கூடியதுதான் கருணாகரன் போன்றவர்களுக்கு செலுத்தக் கூடிய அஞ்சலியாக இருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் என். சிறிகாந்தா தெரிவித்தார்.

புங்குடுதீவில் இன்று இடம்பெற்ற திரு. கருணாகரன் நினைவுநாளில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

87 வருடங்கள் ஒரு நிறைவான வாழ்வை கருணாகரன் நடாத்திச் சென்றுள்ளார். ஆகவே, அவருடைய மரணத்தை இட்டு நாங்கள் கவலை கொள்ளக்கூடாது. அவருடையது ஒரு நிறைவான வாழ்;க்கை.

ஆனால், எங்கள் இனம் தொடர்பான கனவுகள் நிறைவேறுவதைப் பார்க்கின்ற சந்தர்ப்பம் அவருக்கு கிடைக்கவில்லை. அந்த சந்தர்ப்பம் எங்களில் பலருக்கும் கிடைக்கப் போவதில்லை என்பதும் எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

அந்த சந்தர்ப்பத்தை பெறுவதற்கு வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களுடைய மக்களில் வயதானவர்கள் என்னும் எத்தனை வருடங்கள் காத்திருந்தால் அதைப் பெற்றுக் கொள்வார்கள் என்பது தெரியாது.

1963 ஆம் ஆண்டு இலங்கையில் ஆட்சி மொழியாக சிங்களம் மட்டுமே இருக்கும் என்கின்ற மசோதாவை, சட்ட மூலத்தை அப்போது பதவிக்கு வந்திருந்த பிரதமர் கொண்டு வந்திருந்த போது, தமிழினத்தின் தலைமையை ஏற்றிருந்த தமிழரசின் தந்தை செல்வநாயகம் தலைமையில் 400 தொண்டர்கள் தமிழினத்தின் சார்பில் தங்களுடைய எதிர்ப்பினை காட்டுவதற்கு கொழும்பு காலி முகத்திடலில் தற்போது ஜனாதிபதி செயலகமாக மாற்றப்பட்டிருக்கும் அன்றைய பாராளுமன்றமாக காணப்பட்ட கட்டடத்தின் முன் சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போது, அதில் 21 வயது இளைஞனாகக் கலந்து கொண்டு சிங்கள காடையர்களின் கடுமையான தாக்குதலுக்கு இலக்காகியவர் கருணாகரன்.

நீண்ட தேசிய பாரம்பரியம் அவருடைய வாழ்வில் இறுதி வரை நிலைநாட்டப்பட்டிருந்தது. தமிழ் தேசிய இனத்திற்காக அவர் என்ன செய்தார், என்ன துன்பங்களை அனுபவித்தார் என்பதென்லாம் ஒரு நீண்ட வரவாறு.

தீவக மக்களுக்கு பெரும் தொண்டாற்றியவர் கருணாகரன். இந்த புங்குடுதீவு மண்ணில் தான் அவர் வாழ வேண்டும் என்ற பிரவாதத்தோடு, யுத்தம் முடிவுற்ற பின்பும் இங்கே வந்து, பல கஸ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்த அந்த வைராக்கியம் புங்குடுதீவு மக்கள் அனைவருக்கும் ஒலு உதாரணம்.

நிச்சயமாக இந்த புங்குடுதீவு மண் மலரும். தீவகம் மலரும். எங்கள் தமிழீழமும் மலரும், அப்படி மலர்கின்ற போது கருணாகரன் போன்ற தேசப்பற்றாளர்கள் நினைவுகூரப்படுவார்கள்.

தமிழ் மக்கள் தேசப்பற்றோடும், ஒற்றுமையோடு, இலட்சிய விசுவாசத்தோடு, ஓர் உயர்ந்த விடுதலைப் பாதையில் பயணிப்பதற்கு தங்களால் இயன்ற அனைத்தையும் செய்யக் கூடியதுதான் கருணாகரன் போன்றவர்களுக்கு செலுத்தக் கூடிய அஞ்சலியாக இருக்கும். – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *