
இலங்கையை சேர்ந்த ஒருவரும் அவரது பிள்ளைகளும் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவுஸ்ரேலிய பொலிஸார், தந்தை தனது பிள்ளைகளை கொலைசெய்துவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
40 வயதுடைய இந்திக குணதிலக என்பவரே, நான்கு வயது மகளையும் ஆறுவயது மகனையும் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார், சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
Essington Street in the southeast Perth suburb of Huntingdale என்ற பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இலங்கையின் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிள்ளைகள் தனியாக வசிக்கும் தாயை சந்திப்பதற்கு வருவதற்காக திட்டமிட்டிருந்தனர் என்றும் எனினும் அவர்கள் வராததை தொடர்ந்து எச்சரிக்கை அடைந்த அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அந்த வீட்டிற்கு சென்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகள் இந்த மரணங்களுக்கும் வேறு எவருக்கும் தொடர்பில்லை என்பதை உறுதி செய்துள்ளன எனபொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கடற்கரையில் தான் பிள்ளைகளுடன் காணப்படும் படத்தினை குணதிலக வெளியிட்டுள்ளார் என்றும் கிறிஸ்மஸிற்கு முன்னர் வெளியிட்ட வீடியோவொன்றில் தான் மனஉளைச்சலிற்கு ஆளாகியுள்ளதை அவர் உறுதி செய்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.