ராஜகிரிய நாவல பாலத்தின் கட்டுமானப் பணிகள் விரைவில் பூர்த்தி: அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

கொழும்பு, ஜனவரி 30:

ராஜகிரிய நாவல கால்வாயின் குறுக்கே கட்டப்படும் புதிய பாலத்தின் பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக, அரசாங்கத்தின் பிரதம கொறடாவும், நெடுஞ்சாலைகள் துறை அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். மேலும், இந்தப் பாலம் மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டால், ராஜகிரிய பகுதியில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோகூறுகையில் ” கட்டுமானப் பணியில் உள்ள புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளேன். இப்பாலத்தின் கட்டுமானப் பணிகள் 60 சதவீதம் முடிவடைந்துள்ளன.

இந்தப் பாலம் ரூ. 1,698.55 மில்லியன் செலவில் RDA மேற்பார்வையில் நிர்மாணிக்கப்படுகிறது. இரண்டு வழிப்பாதைகள் கொண்டதாக இந்தப் பாலத்தை அமைத்து வருகிறோம். 600 மீட்டர் நீளமும் 10.4 மீட்டர் அகலமும் கொண்ட இப் பாலத்தின் அருகே 1.5 மீட்டர் அகலத்தில் இரண்டு பாதசாரிகள் கடவையும் அமைக்கப்படுகிறது.

சுற்றியுள்ள சதுப்பு நிலத்துக்கு சேதம் ஏற்றபடாத வகையில் தூண்களின் மீது பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய பாலத்தால், ராஜகிரிய நகரின் போக்குவரத்து நெரிசல் குறைவடையும் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *