
நீதி அமைச்சின் நடமாடும் சேவையில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை கையில் எடுக்கக்கூடாது என தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகள் நேற்றுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
’நீதிக்கான அணுகல்’ நடமாடும் சேவை யாழ். மத்திய கல்லூரியில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நடமாடும் சேவை ஆரம்பித்து வைக்கப்பட முன்னர், மத்திய கல்லூரி முன்பாகக் கூடிய காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், இறப்புச் சான்றிதழ் வேண்டாம், உறவுகளே வேண்டும் என்று கோசங்களை எழுப்பி கவனவீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அவர்கள் நிகழ்வு மண்டபத்துக்குள் செல்ல முற்பட்டபோது பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.
இந்தப் போராட்டத்தின்போது வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அங்கு பிரசன்னமாகினார். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் சென்று விவரங்களை வழங்குமாறு கோரினார். இதுவரை பல தடவைகள் பலரிடம் விவரங்களை வழங்கினோம். எதுவும் நடக்கவில்லை என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோபாவேசமாகத் தெரிவித்தனர். இதனையடுத்து ஆளுநர் அங்கிருந்து சென்றார்.