
கம்பஹா மாவட்டம் திவுலப்பிட்டிய பொலிஸ் பிரிவில், வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மீது மிளகாய் தூளை வீசி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தேக நபர்கள் கொலை செய்யப்பட்டவரின் வீட்டுக்கு அயலில் வசித்து வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுனகஹா கிழக்கு பள்ளியப்பிட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த கே.வின்சன் என்ற 60 வயதான நபரே சம்பவத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர் மனைவி உயிரிழந்த பின்னர் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அயல் வீடுகளில் குடியேறியவர்களால் தனக்கு தொந்தரவு எனக் கூறியதன் காரணமாக ஏற்பட்ட தகராறை அடிப்படையாக கொண்டு சந்தேக நபர்கள் நேற்று அதிகாலை வீட்டிற்குள் புகுந்து மிளகாய் தூளை வீசி, கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நபரை கொலை செய்த பின்னர் சமையல் அறையில் இருந்த மிளகாய் தூளை உடல் முழுவதும் பூசியுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.