
உலகில் வறுமையான நாடுகளுக்கு கடன் வழங்குவது தொடர்பாக சீனா விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
சீனா கடன் கொடுத்த நாடுகள், தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவிப்பதாகவும், அந்தநாடுகளால் கடனை மீளச் செலுத்த முடியாத நிலையில் பீஜிங்கின் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகின்றன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்களை சீனா நிராகரிக்கின்றது.
தங்கள் பிம்பத்தை சிதைக்கும் வகையில், மேற்குலக நாடுகளால் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக சீனா கூறுவதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது இதனையே இன்றைய ஆய்வில் பார்க்க இருக்கின்றோம்.
உலகின் மிகப்பெரிய கடன் வழங்கும் நாடுகளில் சீனாவும் ஒன்றாகும்.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கான அதன் கடன்கள் கடந்த பத்தாண்டுகளில் சுமார் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
இத்தொகையானது 2020ஆம் ஆண்டின் இறுதியில் 170 பில்லியன் டொலரைத் தொட்டுள்ளது.
ஆனால் சீனாவின் ஒட்டுமொத்த கடன்கள், இந்தப் புள்ளிவிவரங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதை விட அதிகமாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
வளரும் நாடுகளுக்கு சீனா வழங்கும் பாதி கடன்கள், கடன் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்படவில்லை என அமெரிக்காவின் வில்லியம் ரூ மேரி பல்கலைக்கழகத்தின் சர்வதேச மேம்பாட்டு அமைப்பின் எய்ட் டேட்டா ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இது பெரும்பாலும் அரசாங்கக் குறிப்பிலிருந்து விலக்கி வைக்கப்படுகின்றது. அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள், வங்கிகள், கூட்டு முயற்சிகள் அல்லது தனியார் நிறுவனங்களுக்கு சில தகவல்கள் மாற்றப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
சுமார் 40 இற்கும் மேற்பட்ட குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகள் தங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்துக்கு மேலான கடன்களை சீனாவிடமிருந்து பெற்றுள்ளன.
மறுபுறம் ஜிபூட்டி, லாவோஸ், சாம்பியா மற்றும் கிர்கிஸ்தான் போன்ற நாடுகள், தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் 20 சதவீதத்தை சீனாவிடமிருந்து கடனாகப் பெற்றுள்ளன.
சீனாவிற்கு செலுத்த வேண்டிய கடனில் பெரும்பகுதியான கடன்கள், பட்டுப்பாதைத் திட்டத்தின் கீழ் சாலைகள், புகையிரதம், துறைமுகங்கள், சுரங்கம் மற்றும் எரிசக்தித் துறை சார்ந்தவை.
சீனா மற்ற நாடுகளை தன் கைக்குள் வைத்திருக்க கடன் பொறிகளைப் பயன்படுத்துவதாக பிரிட்டனின் வெளிநாட்டு உளவு அமைப்பான எம். ஐ 6-ன் தலைவர் ரிச்சர்ட் மூர் நேர்காணல் ஒன்றின் பொது குறிப்பிட்டிருந்தார்.
சீனா மற்ற நாடுகளுக்குப் பணத்தைக் கடனாகக் வழங்குகின்றது. அந்நாடுகளால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத போது முக்கிய சொத்துக்களின் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க வேண்டியதாகிறது. இது சீனாவிற்கு எதிரான நீண்டகால குற்றச்சாட்டு என்றாலும் சீனா தொடர்ந்தும் அதனை மறுத்து வருகின்றது.
சீனாவை விமர்சிப்பவர்களால் அடிக்கடி குறிப்பிடும் ஓர் உதாரணம் இலங்கையாகும்.
அதாவது சீன முதலீட்டுடனான அம்பந்தொட்டை துறைமுகத் திட்டத்தால் ஏற்பட்ட கடன் நெருக்கடியும் மறுக்க முடியாததாகும்.
சீனக் கடன்கள் மற்றும் சீன ஒப்பந்ததாரர்களைப் பயன்படுத்தி பில்லியன் கணக்கில் செலவழிக்கப்பட்ட திட்டமாகும்.
லாபத்தை நிரூபிக்க முடியாமல் திணறி சர்ச்சையில் சிக்கியது இலங்கை. இறுதியாக, 2017 ஆம் ஆண்டில் மேற்கொண்டு சீனா முதலீடு செய்வதற்கு ஈடாக, துறைமுகத்தில் 70 வீத கட்டுப்பாட்டை சீனாவிற்கு 99 ஆண்டு குத்தகைக்கு வழங்க இலங்கை ஒப்புக்கொண்டது.
ஆனால் இந்த ஒப்பந்தம் உள்ளூர் அரசியல் உள்நோக்கங்களால் உந்தப்பட்டது என்றும், சீனா ஒருபோதும் துறைமுகத்தின் முறையான உரிமையைப் பெறவில்லை என்றும் பிரிட்டனைத் தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான சாதம் ஹவுஸ் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையின் ஒட்டுமொத்த கடனில் பெரும்பகுதி கடன் சீனாவிடமிருந்து பெறப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றது.
இந்நிலையில் இலங்கையின் மோசமான பொருளாதார நிலைமையை அடிப்படையாகக் கொண்டு அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் போன்று சீனா மேலும் முக்கிய பகுதிகளை, வளங்களைச் சுரண்டுவதற்கான கோரிக்கைகளை முன்வைக்கலாம் என இலங்கையர்கள் அச்சமடைந்துள்ளதாக தெற்காசிய ஆய்வுகளுக்கான ஐரோப்பிய சிந்தனைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
‘இருப்பினும், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி மற்றும் அவரது சிறப்புரிமை பெற்ற பரிவாரங்கள் தங்களின் விஜயத்தின்போது இலங்கை மற்றும் மாலைதீவில் காணப்பட்ட பல்வேறு தொற்றுநோய் விதிமுறைகளைக் கண்டு மட்டும் புருவங்களை உயர்த்தவில்லை.
தேசியவாத இலங்கையர்களும் மாலைதீவர்களும் தங்கள் இறையாண்மையின் மீது கொண்டிருந்த ஆழமான வேரூன்றிய அக்கறையைக் கண்டும் அவர்கள் புருவங்களை உயர்த்தினர்.
அதுமட்டுமன்றி சீனாவின் கடன் பொறி இராஜதந்திரத்தின் வலுக்கட்டாய பயன்பாட்டின் மூலம் பெருகி வரும் ஆபத்து நிலைமைகளையும் அவர்கள் அறிந்துள்ளனர் என்றும் சிந்தனைக் குழு குறிப்பிட்டுள்ளது.
மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் சோலி, இந்தியா மற்றும் பிற முக்கிய நாடுகளுடன் மிகவும் நெருக்கமாகத் தொடர்புகொள்வதன் மூலம் சீன செல்வாக்கு மற்றும் கடன் சிக்கலைக் கட்டுப்படுத்த முயன்றார். மாலைதீவில் வாங் யீக்கு ஆதரவான மற்றும் அன்பான வரவேற்பு இருந்த போதும் அங்கு அவர் பல வெற்றிகளைப் பெற்றதாகத் தெரியவில்லை.
மாலைதீவில் 2018 இல் சீனா சார்பு தலைவர் அப்துல்லா யாமீன் மாற்றியமைக்கப்பட்டதன் பின்னர் பதவிக்கு வந்த ஜனாதிபதி இப்ராஹிம் சோலிஹ், இந்தியாவுடனான கூட்டுவாழ்வு உறவுகளுக்கு துல்லியமாகத் திரும்பினார்.
இந்தியா மற்றும் பிற முக்கிய நாடுகளுடன் மிகவும் நெருக்கமாகத் தொடர்புகொள்வதன் மூலம் சீன செல்வாக்கு மற்றும் கடன் சிக்கலைக் கட்டுப்படுத்த சோலி முயற்சித்தார் என்றும் சிந்தனைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையைப் போலவே மாலைதீவுகளும் சீனாவின் ஒரே மண்டலம் மற்றும் பாதை முன்முயற்சியின் ஒரு பகுதியாகும். இதை அமெரிக்காவானது சிறிய நாடுகளைச் சிக்க வைப்பதற்காக சீனாவின் ‘கடன் பொறி’ இராஜதந்திரத் திட்டம் என்று முத்திரை குத்தியுள்ளது.
எனவே, சோலிஹ் தலைமையிலான ஆட்சி, இந்த ஆண்டு பரந்த இந்தோ-பசிபிக் முன்னேற்றங்களில் அதிக ஆர்வத்தைக் காட்டுவதன் மூலம் சீனாவுடனான உறவுகளை சமநிலைப்படுத்த முயன்றது.
மேலும் இதன் ஒரு அங்கமாக அமெரிக்காவுடன் மாலைதீவு முதல் வருடாந்திர பாதுகாப்பு உரையாடலில் ஈடுபட்டுள்ளது. அத்துடன் அமெரிக்காவின் இராஜதந்திரப் பணியை தனது நாட்டுக்கென நடத்துவதற்கு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறிருக்க, மாலைதீவிலிருந்து வாங் யி இலங்கைக்கு வந்தார். இலங்கை ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இந்நாட்டில் 2021 நவம்பரில் அந்நியச் செலாவணி கையிருப்பு சுமார் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது.
இதனால் இலங்கையால் ஆகக்கூடியது ஒரு மாதத்திற்கான இறக்குமதியை மட்டுமே தக்கவைக்க இயலுமாகவுள்ளது.
அதுமட்டுமன்றி இலங்கையில் பெருகிவரும் கடன்தொகையால் நாணய நெருக்கடி மற்றும் உயர் பணவீக்கம் காரணமாக இறையாண்மை தொடர்பான கரிசனைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
எனவே, சுற்றுலாவை ஊக்குவித்தல், முதலீடுகள் மற்றும் கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யிக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் ஆராயப்பட்டுள்ளன.
மேலும் சிந்தனைக் குழுவின் கூற்றுப்படி, சீன உயரதிகாரியும் அவரது தூதுக்குழுவும், இலங்கைக்கான விஜயத்தின் பின்னணி, சீனாவில் ஆபிரிக்கக் காலடியில் முழுமையாக தங்கியிருக்காது தெற்காசியாவுக்கும் தங்கள் திட்டங்களை விரிவுபடுத்தி நகர்த்துவதாகும்.
ஏனென்றால், ஆபிரிக்காவில் ஆயிரக்கணக்கான நகரங்கள் முழுவதுமாக மூடப்பட்டுள்ள நிலையில் அங்கு அவர்களின் இலக்கு தோல்வி கண்டுவிடும் என்ற அச்சம் சீனாவுக்கு உள்ளது. ஆகவே தான் தற்போது தெற்காசியா நோக்கி நகர்ந்திருக்கின்றது.
இந்நிலையில், நாட்டில் நிம்மதியாக ஒரு நாளைக் கடத்துவதே பெரும் பாடாக உள்ளது.
உரம் இல்லை என்பதனால் உண்பதற்கு உணவுப் பற்றாக்குறை. இந்நிலை நீடித்தால் பட்டினிதான். இனி சாப்பிட என்ன செய்யப்போகின்றோம் என யோசிக்கும் முன்பே சமையல் எரிவாயுக்கள் இன்று நாட்டில் நாளா பக்கமும் வெடிக்கின்ற சம்பவங்கள் சமைத்து உண்பதற்கே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
மீள முடியாத கடன் நெருக்கடிக்குள் இலங்கை சிக்கித் தவித்து திவாலாகியுள்ள நிலையில் எல்லை கடந்து செல்லும் கடன் சுமை பொருளாதாரப் போர் தொடுத்து மக்களை வதைக்க ஆரம்பித்துள்ளது என்றே கூற வேண்டும்.