
யாழ்ப்பாணம், ஜனவரி 30:
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை முறியடித்து வளமான எதிர்காலத்தினை தற்போதைய அரசாங்கம் உருவாக்கும் என்று கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மேலும், மக்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்தும் வகையில் சில ஊடகங்கள் செயற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
கொக்குவில் இந்துக் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட “ஸ்மார்ட் வகுப்பறை” கட்டிடத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் நிதி ஒதுக்கீட்டில் கொக்குவில் இந்துக் கல்லூரியில் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறை கட்டிடத் தொகுதியை திறந்து வைக்க அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, ஜீ. எல். பீரிஸ், அலி சப்ரி ஆகியோர் அணி வகுப்பு மரியாதைகளுடன் பாடசாலை மாணவர்களினால் அழைத்து வரப்பட்டிருந்தனர்.