ஜனவரியில் 75 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள்: சுற்றுலாத் துறை அமைச்சர்

கொழும்பு, ஜனவரி 31: ஜனவரி மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 75,000 ஐ தாண்டியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியது:

ஜனவரி 1 முதல் ஜனவரி 29 வரை நாட்டுக்கு 76,538 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
இவர்களில், பெரும்பாலானவர்கள் ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர்கள்.

அதன்படி, ஜனவரி மாதத்தில் 12,368 சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவில் இருந்து வந்துள்ளனர். இந்தியாவில் இருந்து 11,028 பேரும், உக்ரைனில் இருந்து 7,427 பேரும், இங்கிலாந்தில் இருந்து 6,929 பேரும், ஜெர்மனியில் இருந்து 4,902 பேரும், பிரான்சில் இருந்து 3,337 சுற்றுலா பயணிகளும் வந்துள்ளனர்.

மேலும், போலந்து, ஆஸ்திரேலியா, மாலைதீவு, கஜகஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

கடந்த வருடம் நாட்டிற்கு194,495 சுற்றுலாப் பயணிகள் வந்தனர். கடந்த ஆண்டு ஜனவரியில் 1,682 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே இலங்கைக்கு வந்தனர்.

நிகழாண்டில், 1.1 மில்லியனுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவார்கள் என சுற்றுலாத்துறை அமைச்சகம் எதிர்பார்க்கிறது. நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், குறுகிய, நடுத்தர, நீண்ட கால வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம்.

ஓமிக்ரோன் திரிபின் பரவலால், சுற்றுலாத்துறை உலகளாவிய ரீதியில் மீண்டும் தடைப்பட்டுள்ளது, ஆனால், இலங்கையில் தடுப்பூசி திட்டத்தின் வெற்றியால், அதிகளவு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வர விரும்புகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *