பெப்ரவரி மாதத்திற்குள் மின்சாரத் தேவையை நிர்வகிக்க முடியும் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

நாளை தொடக்கம் பெப்ரவரி மாதத்திற்குள் மின்சாரத் தேவையை நிர்வகிக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட மின்வெட்டு தொடர்பான பிரேரணைக்கு பெப்ரவரி 4ஆம் திகதி வரை அனுமதி வழங்கப்பட மாட்டாது என அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையானது ஜனவரி 25 ஆம் திகதி முதல் பெப்ரவரி 4 ஆம் திகதி வரை மின்வெட்டை அமுல்படுத்த வேண்டுமென முன்மொழிந்திருந்தது.

இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க, ‘இலங்கை மின்சார சபையின் மின்வெட்டுக்கான முன்மொழிவைத் தொடர்ந்து, மின் உற்பத்தி நிலையங்களின் நிலை மற்றும் எரிபொருள் விநியோகம் குறித்து நாங்கள் தொடர்ந்து மீளாய்வு செய்தோம்.

இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்வெட்டு தேவையில்லாததால் அனுமதிக்கவில்லை. உத்தேச மின்வெட்டு ஏற்படுத்தப்பட்டிருந்தால் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் சுமார் 31 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கும். மின்வெட்டை தடுத்ததன் மூலம் 31 பில்லியன் ரூபாவை சேமிக்க முடிந்தது.

பெப்ரவரி மாத தொடக்கத்தில் கூட மின்வெட்டு இல்லாமல் தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக உயர்தரப் பரீட்சைகள் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளன. இந்த தேர்வில் வெற்றிபெற, தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.

புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் 3ஆம் அலகின் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தடையின்றி மின்சாரம் வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கச்சா எண்ணெய் கிடைத்துள்ளது. எனவே, எதிர்காலத்தில் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை சுத்திகரிக்கும் பணியை ஆரம்பிக்க முடியும்.

எங்களுக்கு உடனடியாக மின்சாரத்தைப் பெறுவதற்கான வழிகளில் ஒன்று பல்வேறு நிறுவனங்களுக்குச் சொந்தமான ஜெனரேட்டர்கள். இதுவரை 100 மெகாவாட் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த வாரம் மற்றொரு குழுவுடன் விவாதிக்கவுள்ளோம். அடுத்த மாத இறுதிக்குள் அரசு மற்றும் தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து 300 மெகாவோட் மின்சாரம் வழங்குவது குறித்து இறுதி முடிவு எட்டப்படும் என நம்புகிறோம்.” எனவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *