
கொழும்பு, ஜனவரி 31: எவ்வித இடையூறுகள் வந்தாலும், மேம்பாட்டுப் பணிகளில் அரசு பின்வாங்கப் போவதில்லை என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியது: கொரோனா தொற்றால் உலகளாவிய ரீதியில் நெருக்கடி நிலை நிலவுகிறது. அரசு இதனால் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது. ஆனால், நாட்டை வீழ்ச்சியடையச் செய்ய அது ஒரு காரணமல்ல.
இலங்கையின் பெரும்பாலான கிராமப்புறங்களை அரசாங்கம் ஏற்கனவே மேம்படுத்தத் தொடங்கியுள்ளது. பெப்ரவரி 3 ஆம் திகதி 100,000 புதிய திட்டங்களை தொடங்கவுள்ளோம். நாட்டிலுள்ள ஒவ்வொரு உள்ளூராட்சிப் பிரிவுக்கும், ரூ.3 மில்லியனை அரசு ஒதுக்கியுள்ளது. நாட்டை மேம்படுத்துவதில், அரசு அதிக கவனம் செலுத்துகிறது.
அரசால், 100,000 கிலோமீற்றர் வீதித் திட்டம், நீர்ப்பாசனத் திட்டங்கள், தொழில்முனைவோரை உருவாக்குதல் உள்ளிட்ட பல திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.