மதுரங்குளியில் கார் மோதி நபரொருவர் உயிரிழப்பு!

சிலாபம் பிரதான வீதியின் மதுரங்குளி 10 ஆம் கட்டை பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

மதுரங்குளி பகுதியில் யாசகத்தில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று புத்தளம் மதுரங்குளி 10 ஆம் காட்டுப்பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, குறித்த நபர் மீது மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபரை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த நபர் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை எனத் தெரிவித்த பொலிஸார், சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று புத்தளம் மாவட்ட நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது சந்தேக நபரான குறித்த காரின் சாரதியை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *