
மூதூர் வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட தி.மூ. ஆலிம்சேனை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் அதிபரை இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி பாடசாலையின் முன்பாக இன்று காலை 7.00 மணிமுதல் 12.00 மணிவரை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
இவ்வார்ப்பாட்டத்தினை பெற்றோர்கள், பழைய மாணவர்கள், சங்கங்களின் உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் உள்ளிட்டோர் முன்னின்று நடாத்தியிருந்தனர்.
இதன்போது, ‘அதிபரின் பதவி ஆசைக்கு எமது பாடசாலைதான் பலிக்கடாவா, 16 வருடங்கள் தாண்டியும் பதவி வகிக்க இது மன்னராட்சியா, கல்வி அதிகாரிகளே அதிபரிடம் இருந்து எமது பாடசாலையினை மீட்டுத்தாருங்கள், 16 வருடங்கள் அதிபராக இருந்து சாசித்தவை என்ன?, நிர்வாக திறனற்ற அதிபரை உடன்மாற்று’ உள்ளிட்ட வாசகங்களை ஏந்தியவாறு கோசமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, ஆர்ப்பாட்ட இடத்திற்கு மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் முனவ்வரா நளீம் வருகைதந்து அதிபரை மாற்றுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் வாக்குறுதி வழங்கியதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 12 மணியளவில் கழைந்து சென்றனர்.

