உயர்தர பரீட்சை காலத்தில் அனைவருக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும்:ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதிகளில் அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கோரியுள்ளார்.

கல்வி அமைச்சின் செயலாளரிடம் இந்த கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலத்தில் ஆரம்ப பிரிவிற்கான பாடசாலைகளை நடாத்த வேண்டாம் என அவர் கோரியுள்ளார்.

அண்மைய நாட்களில் கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கோவிட் தொற்று கூடுதலாக பரவி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான ஓர் பின்னணியில் ஆரம்ப பிரிவு மாணவர்களை அழைத்து கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வது நோய் கட்டுப்பாட்டை பாதிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விடுமுறைக் காலத்தின் பின்னர் நாட்டின் நிலைமையை கவனத்திற்கொண்டு பாடசாலை ஆரம்பிப்பது குறித்து தீர்மானம் எடுக்க முடியும் என ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கட்டம் கட்டமாக பாடசாலைகளுக்கு மாணவர்கள் அழைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜனவரி 10ம் திகதி முதல் அனைத்து மாணவர்களும் பாடசாலைக்கு அழைக்கப்பட்டனர்.

இவ்வாறு அழைக்கப்பட்டதன் பின்னரே மாணவர்கள் மத்தியில் நோய்த்தொற்று பரவுகை அதிகரித்தது என அவர் தெற்கு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *