
யாழ்ப்பாணம் – கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு மைதானம் ஊடாக செல்லும் பாதையின், உரிமம் பிரச்சினை காரணமாக தற்போது இழுபறி நிலை காணப்பட்டு, நுழைவாயில் பூட்டப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பாதையின் உரிமையாளர் என குறிப்பிடப்படும் தேசமான்ய லயன் அருள் ஜெயந்திரனால் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பாடுள்ளதாவது,
1970 களில் எனது தந்தையாரான டாக்டர் இ.அருள்பிரகாசத்தால் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு அக்காலத்து அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க இப்பாதையானது கல்லூரி மைதானப் பாதைக்காக விட்டு கொடுக்கப்பட்டதே தவிர கல்லூரிக்கு எழுதிக்கொடுக்கவில்லை.
இன்னும் இப்பாதையின் காணி உறுதியானது எமது பெயரிலேயே உள்ளது. எனது தந்தை காணியை கொடுத்ததன் நோக்கம் பாடசாலைப் பாவனைக்கு மட்டுமே என்பதை சுட்டிக்காட்டுகிறேன். இப்பாதைக்கு 2010 ஆம் ஆண்டளவில் கல்போட்டு, தார்போட்டு கொடுத்தது அவரின் மகனாகிய நான் அருள் ஜெயந்திரன்.
இதை நன்கு அறிந்த தற்போதைய அதிபரும் K.C.C.C விளையாட்டுக் கழகமும் எம்மிடமோ அல்லது பிரதேச சபை அனுமதிபெறாமல் 4 அடி பாதை ஒன்றை எனது தந்தை வழங்கிய பாதைக் காணியில் ஏற்படுத்தி எனது தந்தையின் நோக்கத்தை கொச்சைப்படுத்தி எம்மையும் அவமதித்துள்ளனர் என்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது சம்பந்தமாக கடந்த 29 ஆம் திகதி அதிபருடனும், உப அதிபர் மற்றும் ஆசிரியர் முன்னிலையில் கல்லூரி மைதானத்தில் கதைத்தபோது அதிபர் கூறினார், உங்களுக்கு K.C.C.C பாதை வைத்தது பிடிக்காவிட்டால் பாதையை அடைக்கும்படி கூறியிருந்தார். அதற்கமைய எமது காணிப்பக்கம் திறக்கக்கூடியதாக அமைத்திருந்த கேற்ரை கழட்ட முற்பட்டபோது சண்முகநாதன் பிரதாபன் என்பவர் அதைத்தடுத்தது மட்டுமில்லாமல் என்னைத் தாக்கிவிட்டு சென்றார்.
இது சம்பந்தமாக யாழ் பொலிஸ் நிலையத்தில் நான் இன்று முறைப்பாடு செய்துள்ளேன். மேலும் எனது வேலையாட்கள் மதிய உணவு அருந்திவிட்டு வந்தபோது பிரதேசசபையால் வேலைகளை நிறுத்துமாறு அறிவித்தல் ஒட்டப்பட்டிருந்தது. இதனால் எனக்கு பாரிய நட்டமும் மன உழச்சலையும் ஏற்படுத்தியுள்ளனர்.
பிரதேசசபை தவிசாளரும் இதுசம்பந்தமாக தீர விசாரிக்காமல் நாளை (நேற்று முன்தினம் ) நடைபெறும் கட்டடத்திறப்புவிழாவுக்கு வரும் அமைமச்சரின் வருiகையை சிறப்பாக்குவதற்காக அழகுபடுத்த இருந்த சிமேந்து பூச்சுவேலையையும் வர்ணம் பூசும் வேலையையும் அதிபரின் கோரிக்கைகிணங்க எனது சொந்தச் செலவில் செய்ய இருந்தவேலையை K.C.C.C விளையாட்டுக் கழகத்தினர் பிரதேச சபையினரை பிழையாக வழிநடத்தி தடைசெய்துள்ளனர்.
என்னைப் பொறுத்தவரையில் பிரதேச சபை தவிசாளர் தீரவிசாரிக்காது தனது சொந்தசெல்வாக்கை கூட்டுவதற்காக இவ்வாறு தடைசெய்துள்ளார் என்று நான் கருதுகின்றேன்.
ஆகவே இது சம்பந்தமாக அரச அதிபர், உள்ளுராட்சி அமைச்சு, வடமாகாண ஆளுநர் தவிசாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோருகின்றேன்.- எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
