
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஏ9 வீதியில் இரு டிப்பர் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று மாலை இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியூடாக ஓமந்தை பகுதி நோக்கி டிப்பர் பயணித்து கொண்டிருந்த போது மாவட்ட செயலகத்திற்கு முன்பாக டிப்பர் வாகனத்தினை சாரதி திடீரென பிரேக் பிடித்துள்ளார்.
இதன்போது, டிப்பர் வாகனத்திற்கு பின்பக்கமாக வந்து கொண்டிருந்த மற்றுமொரு டிப்பர் வாகனம் குறித்த டிப்பருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதுடன், வீதிக்கு அருகே நின்ற மோட்டார் சைக்கிளும் டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் நின்ற ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பின்பக்கமாக வந்த டிப்பர் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
