
கொழும்பு, பெப் 2: கொழும்பு துறைமுகத்தில் இருந்து 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிடப்பட்டிருந்த எம்வி எக்ஸ்பிரஸ் பேர்ல் டேங்கர் என்ற கப்பல் கடந்த ஆண்டு எரிந்து நாசமாகியது. இதன் கழிவுகளால், சுற்றுச் சூழலுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இந்தக் கழிவுகள் வரும் 120 நாட்களுக்குள் முழுமையாக அகற்றப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு எடுத்த முக்கிய முடிவுகள் தொடர்பாக, அரசு மூத்த அதிகாரி கூறியது:
எம்வி எக்ஸ்பிரஸ் பேர்ல் டேங்கர் கப்பலின் கழிவுகளை அகற்றும் செயல்முறையால் கடல் மாசு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யம் வகையில், வணிக கடற்படை செயலகத்தின் பணிப்பாளர் நாயகத்தின் கீழ், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கழிவுகள் வரும் 120 நாட்களுக்குள் முழுமையாக அகற்றப்படும்
இந்த அழிவால், பாதிக்கப்பட்ட அனைத்து மீனவர்களுக்கும் முதல் தவணை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.அடுத்த தவணை இழப்பீடுகள் விரைந்து வழங்கப்படும்.
களுத்துறை மாவட்டத்தில் மீன்பிடிக்க விதிக்கப்பட்டிருந்த தடை முற்றாக நீக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களுக்கும் பொருந்தும் கட்டுப்பாடுகள் / தடைகள் கழிவுகள் அகற்றும் செயல்முறை முடிந்ததும் நீக்கப்படும்.
கடல்வாழ் உயிரினங்களின் உயிரியல் மாதிரிகள் மற்றும் பிற மாதிரிகளை ஆய்வு செய்ய வெளிநாட்டு ஆய்வகங்கள் அழைக்கப்பட்டுள்ளன.
இந்த அழிவால் ஏற்பட்ட சுற்றுச் சூழல் பாதிப்பு தொடர்பாக ஆஸ்திரேலியாவின் ஸ்பார்க் ஹெல்மோர் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இதுவரை கப்பல் நிறுவனத்திடம் இருந்து, 3.7 மில்லியன் அமெரிக்க டாலர் இலங்கை அரசுக்கு இழப்பீடாகக் கிடைத்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.