
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட முட்டை தாக்குதல் அருவருக்கத்தக்கது. குறித்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டதாக அமைச்சர் ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல்களுக்கு அரசாங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கின்றது. இலங்கை ஒரு ஜனநாயக நாடாகும். ஜனநாயக சுதந்திரம், கருத்து சுதந்திரம் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு உச்சபட்ச நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சி பொறுப்பினை ஏற்றதன் பின்னர் ஆர்ப்பாட்டம் செய்வதற்காக பிரத்தியேக இடமொன்று ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது.
அதேபோன்று ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு சகல அரசியல் கட்சிகளுக்கும் தேவையான சுதந்திரமும் வழங்கப்பட்டது. எனவே இந்த சம்பவம் தொடர்பில் கவலையை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இது தொடர்பில் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கம் என்ற ரீதியில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதற்கு கடும் எதிர்ப்பினையும் அதிருப்தியையும் தெரிவித்ததோடு இது தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இந்த சம்பவத்துடன் அரசாங்கத்திற்கு எவ்வித தொடர்பும் கிடையாது. அரசாங்கத்தை அதிருப்திக்கு உள்ளாக்குவதற்காக இவ்வாறு செயற்படுகின்றனரா என்ற சந்தேகம் எழுகிறது. எனவே இது தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.