
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் , சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக மாணவர் ஒன்றிய தேர்தல் இடம் பெறாத நிலையில் ,சிற்றுண்டிச் சாலைகளின் குறைகளையாவது நிவர்த்தி செய்யுமாறு யாழ் பல்கலைக் கழக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
பட்டத்தைப் பெற்று வெளியேறிய மாணவர்கள் , தற்போதும் ஒன்றியத்தின் பிரதிநிதிகளாக காணப்படுகின்ற நிலையில் மாணவர்களின் நலன் குறித்து சற்று சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக சிற்றுண்டி சாலையின முன்பாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதோடு, சிற்றுண்டிச்சாலை நிர்வாகத்தினருக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒட்டப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
யாழ் பல்கலைக்கழகத்தில் இயங்கும் பிரதான சிற்றுண்டிச் சாலையில் பல்வேறு குறைபாடுகளும் முறைப்பாடுகளும் மாணவர்களால் எமக்கு அறியத் தரப்பட்டுள்ளன.
அவையாவன உணவின் நிறை அளவு, சுவையின் தரம் போன்றவை திருப்தியற்று காணப்படுகின்றது.
இது உடனடியாக நிவர்த்தி செய்யப்படல் வேண்டும்.சுகாதார சீர்கேடுகள் உணவில் காணப்படுகின்றது.
சிற்றுண்டிச் சாலையில் வரும் இலாபத்தில் 30 மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கப்பட வேண்டும்.
உணவின் வகைகள் குறைவாக காணப்படுகின்றது. அதை அதிகரிக்க வேண்டும்.
ஆரோக்கியமான உணவு வழங்கப்பட வேண்டும் (பால் கடலை கௌபி பயறு) பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட வேண்டும்.
சிற்றுண்டிச் சாலையில் திறக்கும் நேரம் மூடும் நேரம் அறிவிக்கப்பட வேண்டும்.
பால் உண்டு என்றால் வழங்கப்படும் நேரம் காட்சிப்படுத்த வேண்டும்.
விலைப்பட்டியல் உடனடியாக காட்சிப்படுத்த வேண்டும்.
சாப்பாட்டுக்கு வழங்கப்படும் கறி வகைகளின் அளவு எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.
கீரை வகைகளை உணவில் கண்டிப்பாக காணப்படவேண்டும்.உணவு உண்ட பின்னர் மேசைகள் பீங்கான்கள், குவளைகள் என்பன சுத்தம் செய்தல் வேண்டும்.
சிற்றுண்டிச் சாலையில் கடமையில் இருப்பவர்கள் மாணவர்களுடன் மரியாதையுடன் பேச வேண்டும்.
இவை அனைத்தும் நாளைய தினத்திலிருந்து உடனடியாக அமுலுக்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.