மாங்குளத்தில் நடமாடும் சேவை! ஒட்டுசுட்டான் பிரதேச செயலரை பாராட்டிய பொதுமக்கள்

மாங்குளத்தில் நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்ட காரணத்தினால், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளரை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக பரமோதயம் ஜெயராணி பதவி ஏற்றதன் பின்னர் நிர்வாக செயல்பாடுகளில் மக்களின் சிரமங்களைக் குறைக்கும் முகமாக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்

அந்தவகையில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் நிலப்பரப்பு மற்றும் மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதியில் போக்குவரத்து குறைபாடுகள் காரணமாக பல்வேறு தேவைகளுக்காக மக்கள் பிரதேச செயலகம் வரை வந்து அல்லல்படும் நிலை காணப்பட்டு வந்தது

இந்நிலையில் புதிதாக பிரதேச செயலாளராக பதவி ஏற்ற பரமோதயம் ஜெயராணி இந்துபுரம், திருமுறிகண்டி பனிக்கன்குளம் மாங்குளம் ஒலுமடு அம்பகாமம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களின் போக்குவரத்து இடையூறு நேர வீணடிப்பை தடுக்கும் முகமாக பிறப்பு இறப்பு விவாக பதிவு , தேசிய அடையாள அட்டை, சமூக சேவைகள் திணைக்கள சேவைகள் ,சமுர்த்தி திணைக்கள சேவைகள் போன்ற பல்வேறு விடயங்களுக்கான சேவைகளை மக்கள் அருகில் பெறக்கூடிய வகையில் மாங்குளத்தில் இந்த நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது

அந்த வகையில் பிரதேச செயலகம் சென்று மக்கள் பெறவேண்டிய குறித்த சேவைகளை இன்றைய தினம் மாங்குளம் கிராம அலுவலர் பிரிவில் நடமாடும் சேவை ஊடாக மக்கள் பெற்றுக்கொண்டனர் . சுமார் நூறுக்கு மேற்பட்ட மக்கள் இன்று பயன் பெற்றனர்

குறித்த திட்டத்திற்கு கிராம மக்கள் பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக தங்களுடைய போக்குவரத்து மற்றும் நேர வீண் விரயங்களை தவிர்த்து தமக்கான சேவைகளை இலக்குபடுத்தி தந்த பிரதேச செயலாளருக்கு மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *